கடந்த மூன்று நாட்களாகப் பெரிய அளவில் நடந்து முடிந்திருக்கிறது தமிழக அரசு நடத்திய கணித்தமிழ் 24 மாநாடு. மாநாட்டில் எனக்கு 1) ஆலோசனைக் குழு உறுப்பினராகவும், 2) கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் தமிழ் இணையம் என்கிற தலைப்பில் ஒரு கலந்துரையாடலிலும், 3) சாட்-ஜிபிடியில் Prompt Engineering (பிராம்ப்ட் இன்ஜினியரிங்) என்கிற தலைப்பிலும் பேசவும் வாய்ப்பு கிடைத்தது. நிறைவாக இருந்தது.
கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் தமிழ் கணிமை
தமிழ்நெட் 99 மாநாட்டைத் தமிழ் இணையத்தில், கணிமை ஒரு முக்கிய நிகழ்வாக எடுத்துக் கொண்டால், இந்த ஆண்டோடு இருபத்தைந்து ஆண்டுகள் ஆகிறது. இந்தப் பயணத்தை அருகில் இருந்து பார்த்த, அதில் பயணித்த ஐவரைக் கொண்ட கலந்துரையாடல் இரண்டாம் நாள் (9 பிப்ரவரி 2024 மதியம்) நடந்தது. அதன் காணொலி பதிவு இங்கே.
சாட்-ஜிபிடியில் பிராம்ப்ட் இன்ஜினியரிங் (உள்ளீட்டு வடிவமைப்பு)
“Prompt Engineering” என்கிற உள்ளீட்டு வடிவமைப்பு என்ற தலைப்பில் என் உரைக்கான வில்லைகள் இங்கே. இது பயிற்சி வகுப்பு என்பதால் அடிப்படை கோட்பாடுகளுக்கு என்று மூன்றே மூன்று வில்லைகளை மட்டுமே மீதம் அனைத்தும், பதினைந்துக்கும் மேலான நேரடிச் செய்முறை விளக்கங்கள் தான். பேச எனக்கே ஆவலாக இருந்தது, கேட்டுப் பாருங்கள். சாட்-ஜிபிடி என்ற மாய ஜாலத்தைக் கற்கலாம்.
நிறைவு விழாவில் தமிழகத் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் திரு பழனிவேல் தியாகராஜன் அவர்கள் வெளியிட்ட கணித்தொகை என்கிற மாநாட்டு மலரில் “தமிழ் இணையத்தோடு நான் கடந்து வந்த பாதை” என்கிற முக்கியமான ஒரு வரலாற்றுப் பதிவு கட்டுரையை எழுதியுள்ளேன்.
நிறைவு விழாவுக்குப் பிறகு அமைச்சர் மாநாட்டில் பங்கு கொண்ட அழைப்பாளர்களுக்கும், வல்லுநர்களுக்கும் நம் நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சியோடு இரவு உணவும் அளித்துச் சிறப்பித்தார்.
ஒரே சமயத்தில் பல நல்ல உரைகள் நடந்ததால் நானே யூட்யூப்பில் சிலவற்றைப் பார்க்கத் திட்டம். சிறு ஓய்வுக்குப் பிறகு மாநாட்டில் நான் பார்த்து ரசித்தக் கற்றுக்கொண்ட அறிஞர்களின் காணொளிகளைப் பற்றியும் பகிர்கிறேன்.
தமிழக அரசுக்கும், நிர்வாகிகளுக்கும், தமிழ் இணையக் கல்விக் கழகத்திற்கும், மாநாட்டில் உடன் கலந்து கொண்ட அறிஞர்களுக்கும், என் நண்பர்களுக்கும், மாணவர்களுக்கும் நன்றி.
வெற்றிக் கொடியில் எனது பேட்டி
13 பிப்ரவரி 2024, அன்று வெளிவந்துள்ள இந்து தமிழ் திசை நாளிதழின் “வெற்றிக் கொடி” பதிப்பில் எனது சிறிய பேட்டி வந்துள்ளது. பன்னாட்டு ‘கணித்தமிழ் 24’ மாநாடு தமிழ் இளைஞர்களுக்குப் புதிய தொழில்நுட்பக் கலங்கரை விளக்கம் என்கிற தலைப்பில் திரு ம.சுசித்ரா எழுதியுள்ள சுருக்கமான கட்டுரையில் எனது பேட்டி இடம் பெற்றுள்ளது.
Comments