கணினித் தொழில்நுட்பத்தில் இதுவரை செல்பேசியிலும் இணையத்திலும் நாம் பார்த்த முன்னேற்றங்கள் எல்லாம் முன்னோட்டம் தான். அடுத்த ஐந்திலிருந்து பத்து ஆண்டுகளில் செயற்கை நுண்ணறிவு மற்றும் மெய்நிகர் உலகம் போன்றவற்றால் கணினித் தொழில்நுட்பமே அசுர வளர்ச்சி அடையப் போகிறது. அந்த வளர்ச்சியடைந்த உலகத்தில் தமிழ் மொழி மட்டுமல்ல, தமிழ்க் கலாச்சாரம், தமிழ்ப் பண்பாடு, தமிழ்க் கலைகள் இவை அனைத்தும் சரியான முறையில், நமக்கு வேண்டிய வகையில் (இது முக்கியமானது) எப்படி இடம் பெறச் செய்வது என்பதை ஆலோசிக்கத் தமிழக அரசு நடத்தும் இந்தப் பன்னாட்டுக் கணித்தமிழ் மாநாடு வகை செய்யும் என்று நம்புகிறேன்.
தமிழ் இணையக் கல்விக்கழகம் முன்னின்று நேரடியாக நடத்தும் இந்த மாநாட்டு ஆலோசனைக் குழுவில் நானும் இருக்கிறேன். 2010ஆம் ஆண்டு நடந்த தமிழ் செம்மொழி மாநாட்டோடு நடந்த தமிழ் இணைய மாநாட்டில் தான் தமிழக அரசு யுனிகோட் முறையை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்து அடுத்த பத்து ஆண்டுகளில் செல்பேசிகளில் தமிழ் எல்லாவகையிலும் வருவதை வேகப்படுத்தியது. அது போல இந்த வாரம் நடக்கும் மாநாடு செயற்கை நுண்ணறிவு நுட்பத்தில் நாம் செல்ல வேண்டிய திசையை வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.
அறிஞர் பெருமக்கள் இதில் கலந்து கொண்டு தங்களின் ஆராய்ச்சிகளை, கருத்துக்களைப் பகிர வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.

மாநாடு பற்றி இன்றைக்குக் கலைஞர் செய்திகள் தொலைக்காட்சிக்கு நான் அளித்த சுருக்கமான பேட்டி.
மாநாடு குறித்து தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறைக்கு நான் அளித்த சிறிய காணொலி பதிவு.
9 பிப்ரவரி 2024 அன்று வெளிவந்த இந்து திசை தமிழ் நாளிதழில் பன்னாட்டுக் கணித்தமிழ் மாநாடு 2024ஐப் பற்றி தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் இயக்குநர் திரு சே.ரா.காந்தி அவர்களின் கட்டுரையில் என்னைப் பற்றியும் நான் வழங்கவிருக்கும் உரைகளைப் பற்றியும் எழுதியுள்ளார், அவருக்கு நன்றி.

Discover more from Mangoidiots
Subscribe to get the latest posts sent to your email.

