
The Tamil Nadu Government event that happened on time and was crisp
குறிப்பிட்ட நேரத்தில் (மாலை 6.30) சரியாக ஆரம்பித்து, சுருக்கமாக (50 நிமிடங்களுக்குள்) ஆனால் கச்சிதமாக நடத்தப்பட்ட அரசு விழாவிற்கு இன்று மாலையில் சென்றது மகிழ்ச்சி.
முதல்வர் திரு மு. க. ஸ்டாலின் தலைமையில் நடந்த தமிழக அரசின் தமிழ் இணையக் கழகத்தின் கீழ் தமிழ்ப் பரப்புரைக்கழகம் என்கிற அமைப்பின் தொடக்க விழா நிகழ்ச்சி இது. தமிழ் இணையக் கழகத்தின் ஆலோசனைக் குழுவில் இருப்பதால் எனக்கு அழைப்பு வந்தது.
சிறந்த முறையில் ஒலி, ஒளி, காணொளி ஏற்பாடுகளைச் செய்திருந்தார்கள் – பல நாடுகளிலிருந்து ஜும் மூலம் பலரும் பார்த்துக் கொண்டிருந்ததை நாம் காண பெரிய திரை இரண்டு பக்கமும் தெரியும் மாதிரி வைக்கப்பட்டிருந்தது. வெளி நாடுகளில் இருந்த சிலர் சில நிமிடங்கள் பேசினார்கள் – அந்த பேச்சுக்களை நேரடி ஒளிபரப்பு செய்தால் தரம் இருக்காது, இடைஞ்சல்கள் இருக்கும் என்பதால் அவற்றை முன்கூட்டியே பதிவு செய்து, எடிட் செய்து கோர்வையாக ஓடவிட்டார்கள்.
இன்று வெளியிடப்படும் படைப்புகளைப் பற்றி பக்கம் பக்கமாக பேசாமல் தெளிவான அசைந்தாடும் ஒளிப்பதிவாக காட்சிப்படுத்தினார்கள். அரசு நிகழ்ச்சி போலவே இல்லை – மிக நேர்த்தியாக ஏற்பாடு செய்தவர்களுக்கு பாராட்டுக்கள்.
புலன் பெயர்ந்த தமிழர்கள் அவர்களின் பிள்ளைகளுக்குச் சிறந்த, எளிய முறையில் தமிழைக் கற்பிக்க, அவர்களுக்குத் தேவையான பாட தரவுகளை, புத்தகங்களை, அசைந்தாடும் படங்களை (Animation) தயாரிக்கும் நோக்கத்தில் தொடங்கப்பட்டுள்ள இந்த அமைப்புக்கு என் வாழ்த்துகள்.





