சென்னை தி. நகரில் புதிதாகக் கட்டி கும்பாபிஷேகம் செய்த திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் ஸ்ரீ பத்மாவதி தாயார் கோயிலுக்கு நான் போன போதெல்லாம் சாலையிலேயே நல்ல கூட்டம், அதனால் இரண்டொரு முறை வாசலோடு கைகூப்பிவிட்டுத் திரும்பினேன். என் அலுவலகத்திற்கு அருகில் தான் கோயில் இருக்கிறது, இருந்தும் போக இத்தனை மாதங்கள் ஆகிவிட்டது. திருமலைக்குச் சென்று ஸ்ரீ வெங்கடாசலபதி பெருமாளை தரிசனம் செய்ய அவர் திருவுள்ளம் கொண்டால் தான் முடியும் எனச் சொல்வார்கள். அதுபோலத் தான் சென்னையில் வீற்றிருந்தாலும் தாயாருக்கும் போல.
இன்று காலை அலுவலகத்திற்கு வரும் வழியில் அதிகப் போக்குவரத்து நெரிசல். அதனால் இளைப்பாற வாணி மஹால் அருகில் காரை நிறுத்த இடம் கிடைத்தது. காரை நிறுத்தி, ஓர் எட்டு நடந்து, தாயாரை ஏகாந்தமாகச் செவிக்கும் பாக்கியம் பெற்றேன். வியாழன் காலை பத்தரை மணி என்பதால் என்னைத் தவிர மொத்தம் பத்துப் பேர் இருந்திருப்பார்கள். சேவித்து வந்தால், தீர்த்தம் மற்றும் சுவையான தயிர்ச் சாதப் பிரசாதமாகத் தொன்னையில் கிடைத்தது.
ஓம் நமோ நாராயணா!
#Padmavathi_Ammavaru #TTD_Temple_Chennai #Sri_Padmavathi_Ammavari_Temple_TNagar
Comments