எனது யாழ்ப்பாணப் பயணக் குறிப்புகள்: பாகம் 5, யாழ்ப்பாண சுற்றுலாத் தளங்கள்.
இந்தத் தொடரில் இதுவரை யாழ்ப்பாண விமான நிலையம், உணவகங்கள், யாழ்ப்பாணக் கோட்டை, கோயில்கள் இவற்றைப் பார்த்தோம். இந்தப் பதிவில் யாழ் நகரில் இருக்கும் சுற்றுலாத் தளங்களைப் பார்க்கலாம்.
விமான நிலையத்திலிருந்து முதலாவதாக நாங்கள் சென்றது, காங்கேசன்துறை கடற்கரை. மாலை வேளை என்பதால் வெயில் அதிகமாக இருந்தது. கடல் நீரைப் பார்க்கச் சுத்தமாகவும் பச்சை-நீல நிறத்தில் ரம்மியமாக இருந்தது. இது இயற்கை துறைமுகம் என்பதால் முக்கியத்துவம் வாய்ந்தது, அதனால் பாதுகாப்பு காரணங்களுக்கு இது இலங்கை இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது, பொது மக்களுக்கு எந்த இடைஞ்சலும் இருக்கவில்லை. ஒரு சிறிய உணவகம் மற்றும் ஆண்களுக்குப் பெண்களுக்குத் தனியாக (மிகச் சிறிய) சுகாதார வசதி இருக்கிறது, அவ்வளவு தான். வருங்காலத்தில் இது பெரிய சுற்றுலா தளமாக வரும் அமைப்புள்ளது.




பொதுவாக யாழ் நகரில் வாகனங்கள் குறைவாகவே இருக்கிறது. காவலர்கள் இல்லையென்றாலும் மக்கள் தலைக்கவசம் அணிகிறார்கள். வேறு வாகனங்கள் இல்லையென்றாலும் சாலை சந்திப்புகளில் போக்குவரத்து சிகப்பு சமிக்ஞைக்கு வெள்ளைக் கோட்டுக்கு முன்பே தங்களின் வண்டிகளை நிறுத்திவிடுகிறார்கள்.



நாங்கள் தங்கியிருந்தது யாழ்ப்பாணத்தில் இருப்பதிலேயே புகழ் பெற்ற ஐந்து நட்சத்திர வசதிகளைக் கொண்ட ஃபாக்ஸ் ஜாஃப்னா (Fox Jaffna). முன்பே இணையம் வழி பதிவு செய்திருந்ததால் கொஞ்சம் குறைவான வாடகையில் அறைகள் எங்களுக்குக் கிடைத்தது – அதுவே இருவர் தங்கும் ஓர் அறை ஓர் இரவுக்கு US$140 வந்தது, இந்திய ரூபாயில் 12,000. இந்த நட்சத்திர விடுதி மிக நல்ல முறையில் பராமரிக்கப்படுகிறது. அறைகள் மிக வசதியாக இருந்தது. உணவு நல்ல தரத்தில் இருந்தாலும் உணவு வகைகள் குறைவு, இந்திய வகைகள் (தோசை, இட்லியைத் தாண்டி) எதுவுமில்லை, சுவையும் சுமாராகவே இருந்தது. தங்கியிருந்தோரில் எங்களைத் தவிரப் பெரும்பாலானவர்கள் ஐரோப்பியாவிலிருந்து வந்திருந்தார்கள். அவர்களைத் தாண்டி ஒன்றிரண்டு சிங்களக் குடும்பங்களைப் பார்க்க முடிந்தது. எது எப்படியோ சுற்றுலாப் பயணிகள் வருகையால் இந்த நகரின் பொருளாதாரம் வளர வேண்டும், இங்கு வாழும் தமிழ் மக்களின் வாழ்க்கை முன்னேற வேண்டும் – அந்த விதத்தில் பெரும்பாலான அறைகள் பதிவு செய்யப்பட்டிருந்தது மகிழ்ச்சி.



இலங்கையின் உள்நாட்டுப் போரின் போது ஃபாக்ஸ் ஜாஃப்னா வளாகம் போராளிகளால் கைப்பற்றப்பட்டது. அப்போது தங்களின் பாதுகாப்பிற்காக மூன்று பெரிய பதுங்குக்குழிகள் கட்டினார்களாம். பின்னர் இலங்கை இராணுவத்தின் கட்டுப்பாட்டிற்கு வந்த போதும் இவை பயன்படுத்தப்பட்டு வந்தது. சில ஆண்டுகளுக்கு முன்னர் இந்த இடம் அதன் உண்மையான சொந்தக்காரர்களிடம் வந்து பிறகு மொத்த வளாகத்தையும் விடுதியாக மாற்றியிருக்கிறார்கள். இருந்த பதுங்குக்குழிகளை மூடாமல் அவற்றில் இரண்டைப் புதுப்பித்து அருங்காட்சியகங்களாக அமைத்திருக்கிறார்கள். தரையிலிருந்து சில படிகள் என்றாலும், கீழே இறங்கியவுடன் ஒரு வித அச்சம் கலந்த வருத்தமான உணர்வுகள் வருகிறது. ஒரு பதுங்குக்குழியில் முழுவதும் யாழ் நகர வரலாற்றைப் பேசும் படங்களும் பதாகைகளும் இருக்கிறது, நாங்கள் சென்று வந்த இடங்களை, கோயில்களைப் பற்றி இங்கே நிறையத் தெரிந்து கொண்டேன். அடுத்த பதுங்குக்குழியில் இலங்கை மற்றும் வெளிநாட்டுப் பிரபல ஓவியர்களின் படங்கள் பார்வைக்கு அழகாக வைக்கப்பட்டிருக்கிறது – ஒரு காலத்தில் இந்த இடத்திலிருந்து எவ்வளவு அழிவுகள் நடந்திருக்கும், அதே இடத்தில் இப்போது நான் நிம்மதியாக அமர்ந்து ஓவியத்தை ரசிப்பது ஒருவித புது உணர்வாக இருந்தது.









இரண்டாவது நாள் காலையில் நயினாதீவு சென்றுவந்து, மதிய உணவுக்குப் பிறகு, சென்றது ரீயோ ஐஸ்-கிரிம் கடை. அடுத்து யாழ்க் கோட்டையைப் பார்த்தோம். அதற்கு அடுத்து வண்ணை ஸ்ரீ வெங்கடேச வரதராஜ பெருமாள் கோயில் போனோம். பிறகு பார்த்தது மந்திரி மனை. யாழ் நகரில் நல்லூர் கோயிலுக்கு அருகில் இருக்கிறது மந்திரி மனை (Mantri Mahal). யாழ்ப்பாண அரசரின் கீழே மந்திரியாக இருந்தவரின் இல்லம் என்று நம்பப்படுகிறது. ஆனால் வரலாற்றுப்படி இது திராவிட-ஐரோப்பா கட்டிடக்கலை வடிவில் அமைந்திருக்கிறது. இப்போது இங்கே இருக்கும் கட்டிடம் பாழடைந்திருக்கிறது, பார்க்க வெறும் சில சுவர்களும், இடிந்த செங்கல் குவியல்கள் இருக்கிறது. நாங்கள் போன சமயம் வளாகத்தின் உள்ளேயோ கட்டிடத்தின் உள்ளேயோ வேறு யாரும் ஒரு காவலர் கூடயில்லை – நீங்கள் போக விரும்பினால் தயவு செய்து வெளிச்சத்தில் போகவும், விளக்குகள் எதுவும் கிடையாது.






பயணத்தின் மூன்றாவது நாள். காலையில் நாங்கள் முதலில் போனது புகழ்பெற்ற “பொதுசன நூலகம் யாழ்ப்பாணம்” (Jaffna Public Library). உள்நாட்டுப் போரில் முழுவதுமாக அழிக்கப்பட்ட யாழ் நூலகம், மீண்டும் உயிர்ப்பித்து நிற்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. நாங்கள் போன சமயம் பத்திரிகை, நாளிதழ் அறைக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டோம். சிறுவர் அறை, இந்திய அரசு பொருளாதார உதவி செய்து அமைக்கப்பட்ட அறை, இலக்கிய அறை என்று எதற்கும் பொதுமக்களுக்கு அனுமதியில்லை என்ற பதாகை இருந்தது. அதோடு எங்கேயும் புகைப்படம் எடுக்கவும் தடை, அதனால் உங்களுக்குப் படங்கள் எதையும் இங்கே பகிரமுடியவில்லை. வெளியிலிருந்து பார்க்கையில் இந்த நூலகத்திற்கு இன்னும் அதிகமான உதவிகள் வர வேண்டும் என்றே தோன்றுகிறது. அங்கே ஒரு பத்து நிமிடத்திற்கு மேல் செய்ய ஒன்றும் இல்லாததால், யாழ் நகரப் பேருந்து நிலையம் இருக்கும் பகுதிக்குச் சென்றோம். அங்கே இருந்த கடைகளைச் சுற்றிப் பார்த்தோம். கடைகளின் பெயர்ப் பலகைகள் தமிழ் நாட்டில் நாம் எழுதும் முறையிலிருந்து மாறுபட்டு இருப்பதைப் பார்க்க முடிந்தது. பேருந்து நிலையத்திற்கு அருகே யாழ்ப்பாண அஞ்சல் அலுவலகம் இருந்தது, அதன் முன்னர் ஒரு தற்படம் எடுத்துக் கொண்டேன்.







மூன்றாவது நாள் ஊர் திரும்ப விமான நிலையம் செல்லும் வழியில் நாங்கள் சென்றது “சிவபூமி திருக்குறள் வளாகம்”. இது புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள திருக்குறள் அருங்காட்சியகம் மற்றும் ஆய்வுக்கூடம். இங்கே உலகில் உள்ள பல மொழிகளிலும் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டுப் பதிக்கப்பட்டுள்ளது.




இந்தப் பதிவோடு 2025யில் நான் சென்ற யாழ்ப்பாணப் பயணத்தைப் பற்றிய குறிப்புகள் முடிவடைகிறது. சமூக வலைத்தளங்களில் இவற்றைப் படித்து விரும்பிய அனைவருக்கும் நன்றி.
- எனது யாழ்ப்பாணப் பயணக் குறிப்புகள்: பாகம் 1, விமான நிலையம்.
- எனது யாழ்ப்பாணப் பயணக் குறிப்புகள்: பாகம் 2, உணவகங்கள்.
- எனது யாழ்ப்பாணப் பயணக் குறிப்புகள்: பாகம் 3, யாழ்ப்பாணக் கோட்டை.
- எனது யாழ்ப்பாணப் பயணக் குறிப்புகள்: பாகம் 4, யாழ்ப்பாணக் கோயில்கள்.
Discover more from Mangoidiots
Subscribe to get the latest posts sent to your email.

