கலைஞர் தொலைக்காட்சியில் எனது பேட்டி

Kalaignar TV interview by Mr Ramesh Prabha with Mr Venkatarangan Thirumalai on 24 Nov 2008. Various topics on Unicode. Tamil Software & Tamil Computing were discussed including INFITT. The discussions even include the early ideas of a social media, IPTV, IT Act and more. Courtesy: Kalaignar TV.

இந்த வாரம் திங்கட்கிழமை அன்று கலைஞர் டிவியில் காலை எட்டு மணிக்கு எனதுப் பேட்டி ஒளிபரப்பானது. போன வெள்ளியன்று விஜிபி கடற்கரை தங்கும் விடுதியில் திரு. ரமேஷ் பிரபா அவர்கள் கேள்விக் கேட்க நான் பதிலளித்தேன். கீழேயுள்ள இந்த ஒளிப்பதிவைப் பார்த்துவிட்டு உங்கள் கருத்தைச் சொல்லவும். திரு. ரமேஷ் பிரபா அவர்களுக்கு என்னை அறிமுகம் செய்த நண்பர் திரு.ஆண்டோ பீட்டர் அவர்களுக்கு என் நன்றி.

இந்தப் பேட்டியில் நான் என்னப் பேசினேன் என்று நான் இங்கே எழுதுவதை விட நண்பர் மறைமலை இலக்குவனார் எனக்கு அனுப்பிள்ள ஒரு மின்-அஞ்சலில் மிக அழகாக  சொல்லியுள்ளார். ஆகவே அதன் சுருக்கத்தை இங்கே கொடுத்துள்ளேன்.

இணையத்தில் தமிழ் பெற்றுள்ள ஏற்றம், எழுத்துருவைச் சீரமைப்பதில் ஏற்பட்ட பல்வேறு கருத்துக்குழுக்கள், இன்று யூனிக்கோடு எவ்வகையில் உதவுகிறது என்பது குறித்த விவரம்,விசைப்பலகை என்றால் என்ன, விசைப்பலகைகள் மாறுபட்டு அமைந்தது ஏன், ஆங்கிலத்தில் விசைப்பலகையின் ஒருசீர்மை, தமிழில் அத்தகைய ஒருசீர்மைக்கு யூனிக்கோடு எங்ஙனம் உதவுகிறது என்பது பற்றிய ஆய்வு, இன்றைய இளைஞர்கள் கணினித்துறையில் எதிர்கொள்ளும் சிக்கல்கள், இணையத்தில் நிகழும் பல்வேறு மோசடிகள், அவற்றைச் சமாளிக்கும் விதம், டிஜிட்டல் கையொப்பம் என்றால் என்ன, பணவரவு செலவில் அதன் பயன்பாடு யாது, இணைய வானொலி, இணையத் தொலைக்காட்சி ஆகியவை பெற்றுள்ள தனிச்சிறப்புகள், எதிர்காலத்தில் இணையம் பெறப்போகும் வளர்ச்சிவலைப்பூக்களில் தமிழ் பெற்றுள்ள சிறப்பிடம் என்று அடுக்கிக் கொண்டே போனீர்கள்.

கணிப்பொறியாளர்கள் கைகட்டிச்சேவகம் செய்யவேண்டியதில்லை என்பதற்குத் தாங்களும் தங்களுக்கு முன்னரும் பின்னரும் வந்த தொழில் முனைவோர்கள் எடுத்துக்காட்டாக விளங்குவதைச் சுட்டிக்காட்டினீர்கள். ஒபாமாவின் வருகையால் நமக்கு எவ்வித அச்சமும் இல்லை என்பதைச்சுட்டி அமெரிக்காவைப் பூச்சாண்டி காட்டிவருவோரின் அழிம்புக்கு முற்றுப்புள்ளி வைத்தீர்கள்.தமிழக அரசு இதுவரை அளித்துவந்த ஒத்துழைப்புக்கு உத்தமத்தின் சார்பில் நன்றி தெரிவித்தீர்கள். இந்த அல்லது அடுத்த ஆண்டில் இணையமாநாடு நடத்தவேண்டிய சூழலை எடுத்துரைக்கத்தவறவில்லை.

உத்தமம் பற்றிய முறையான அறிமுகத்தை அளித்தபின்னர் தான் உங்கள் உரையைத் தொடங்கினீர்கள்.

எடுப்பான தோற்றம், எழுச்சி வாய்ந்த குரல், சிறப்பான கருத்துகள் என்னும் மூன்றும் ஒருங்கிணைந்து உங்கள் நேர்காணலைச் சுவையுடன் விளங்கச் செய்தது.நன்றி.வாழ்க

Tagged in:

,