இன்று காலை 8 மணிக்குக் கல்வித் தொலைக்காட்சியில் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) பற்றி என்னிடம் கேட்கப்பட்ட பல கேள்விகளுக்கு நான் அளித்த பேட்டி ஒலிபரப்பானது. மாணவர்களின் திறன் மேம்படுத்துதலை மனதில் கொண்டு கேட்கப்பட்ட கேள்விகளுக்கு விளக்கமான பதில்களைக் கொண்ட நிகழ்ச்சி இது. இரண்டு முப்பது நிமிடப் பாகங்களாக யூ-ட்யூபிலும் வந்துள்ளது.
தமிழக அரசின் வேலைவாய்ப்புத் துறையின் தயாரிப்பு. இந்த நிகழ்ச்சியின் சிறப்பு என்னையும், இரு ஒளிப்பதிவாளர்களைத் தவிரத் தயாரிப்பில் இருந்த அனைவரும் பெண்கள். நிகழ்ச்சி மேற்பார்வை திருமதி மித்ரா JEO அவர்கள், தன்னுடன் வேலைசெய்யும் பெண் அலுவலர்கள் ஒவ்வொருவரையும் அவர் பெருமையாக அறிமுகம் செய்தார் – ஒவ்வொருவரும் மிகுந்த ஈடுபாட்டோடு அவர்கள் துறைக்குக் கல்வித் தொலைக்காட்சி கொடுத்திருக்கும் இரண்டு மணி நேரங்களுக்கான நிகழ்ச்சிகளைத் தயாரிக்கிறார்கள் – இந்தளவு அக்கறையைப் பார்க்கவே மகிழ்ச்சியாக இருந்தது. நிகழ்ச்சியைத் தொகுத்து, என்னிடம் கேள்வி கேட்டவர் அந்தத் துறையின் அலுவலர் திருமதி கலைவாணி.
சில வாரங்களுக்கு முன்னர் இந்த ஒளிப்பதிவுக்காக சென்னை கல்லூரிச் சாலை பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் வளாகத்தில் இருக்கும் கல்வி டிவி அலுவலகத்திற்குச் சென்றேன். அங்கே தமிழக அரசு கட்டியுள்ள உலகத்தரத்திலான ஒளிப்பதிவு கூடங்களைப் பார்த்துப் பிரமித்துவிட்டேன். மாணவர்கள் இந்த நிகழ்ச்சிகளை நன்றாகப் பயன்படுத்திக் கொள்வார்கள் என்று நம்புகிறேன். கல்வித் தொலைக்காட்சி கட்டிடத்தில் நான் எடுத்த சில படங்களை இந்தப் பதிவோடு இணைத்திருக்கிறேன்.

பேட்டியின் காணொலிகளின் முகவரிகள் இங்கே: முதல் பாகம், இரண்டாம் பாகம்.
Discover more from Mangoidiots
Subscribe to get the latest posts sent to your email.

