திருமயிலை ஸ்ரீ மாதவப் பெருமாள் திருக்கோயில். சென்னையின் முக்கிய பகுதியான மைலாப்பூரில் இருக்கும் இந்தப் பழமையான ஸ்ரீவைஷ்ணவத் திருக்கோயிலுக்கு நான் இதற்கு முன்னர் சென்றதாக நினைவில்லை. இந்த மாதம் ஸ்ரீ வைகுண்ட ஏகாதசி அன்று தான் சென்று தரிசிக்கும் பெறு கிடைத்தது.
‘மா’ என்றால் அலைமகளான லட்சுமி, அவளுடைய ‘தவ’, அதாவது, கணவன் மாதவன். பாற்கடலைக் கடைந்த போது ஸ்ரீலக்ஷ்மி தோன்றி பெருமாள் மார்பில் வாசம் செய்வதால், மாதவன்.

திருமயிலை ஸ்ரீ மாதவப் பெருமாள் திருக்கோயில் எண்ணூறு ஆண்டுகளுக்கு மேல் பழமையானது என்றும் பல்லவர் காலத்துத் தாழ்வரைக் கோயில் கட்டிட அமைப்பு என்றும் தலவரலாறு கல்வெட்டும் (படம் பார்க்க) விக்கிப்பீடியா பக்கமும் சொல்கிறது. இந்தத் தலத்தில் ஸ்ரீ மாதவப் பெருமாளோடு சேர்ந்து அருள்பாலிப்பது ஸ்ரீ அமிர்தவல்லி தாயார், திரு ப்ருகு முனிவரின் ஆஸ்ரமத்தில் வளர்ந்தார். இத்தலம் மாதவப்பெருமாள்புரம் என மயூரபுரி மஹாத்மியத்தில் அழைக்கப்படுகிறது, மேலும் ஸ்ரீ பேயாழ்வார் அவதரித்த தலம் இது என்றும் சொல்கிறது.

தற்போது (டிசம்பர் 2023) கோயில் முழுவதும் புதுப்பிப்பு திருப்பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பச்சை சல்லடை துணியால் முடியக் கோபுரங்களுக்கு இடை இடையே, கண்ணைக் கவரும் வண்ணப் பூச்சுகளில் ஜொலித்த திரு உருவச் சிலைகள் தெரிந்தது. நடு மண்டபத்துத் தூண்களில் கஜேந்திரமோட்சத்தை நினைவுபடுத்தும் விதமாக முதலை சிற்பங்கள் (படம் பார்க்க), அவற்றின் மேலிற்கும் பச்சை வண்ணமும், சிகப்பு நிற வாய், துருத்திக் கொண்டிருக்கும் வெள்ளை பற்களும் நம்மை மெருள வைக்கின்றன. அவற்றுக்கு எதிரில் சாந்த சொரூபனாக ஸ்ரீ சீதா ராமனும், அருகிலேயே ஸ்ரீமத் ராமானுஜரின் வண்ணச் சிற்பங்கள். மண்டபத்தின் தெற்கில் கோயில் குளம், சந்தானபுஷ்க்கரணி .
இந்தக் கோயில் தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறையின் நிர்வாகத்தில் இருக்கிறது. அதனால் அன்னைத் தமிழில் வழிபாடு உண்டு என்கிற பதாகை இருக்கிறது. கோயில் இருக்கும் இடம்: லஸ் முனையில் இறங்கினால் எட்டு நிமிட நடை என்கிறது கூகுள் மாப்ஸ். முண்டகண்ணியம்மன் கோயில் பறக்கும் இரயில் நிலையத்திலிருந்து இருநூறு மீட்டர் தொலைவு. சுலபமாகப் புரிந்து கொள்ள: தண்ணீர்த்துறை சந்தைக்கு (பின்புறம்) கிழக்குப் பக்கம் இருக்கும் சாலையில் இருக்கிறது கோயில்.




Discover more from Mangoidiots
Subscribe to get the latest posts sent to your email.

