அதி காலையில் சூரிய உதயத்திற்கு முன்பே முழிப்பு வந்துவிட்டது. இரவு தூங்கப் போன போது மணி 11:30க்கு மேல் ஆகியிருந்தது, இருந்தும் எவ்வளவு முயன்றும் தூக்கம் வரவில்லை. வெறுத்துப் போய், எழுந்தேன். கொஞ்சம் பழங்களையும் ஒரு கருப்பு காபியும் குடித்துவிட்டு, காரை எடுத்துக் கொண்டு சுமார் ஆறரை மணிக்கு மெரினா கடற்கரையில் காந்தி சிலை இருந்த இடத்திற்குச் சென்றுவிட்டேன். நான் போன நேரம் அங்கே படுத்திருந்த மக்களில் இன்னும் சிலர் உறங்கிக் கொண்டிருந்தார்கள், மெரினாவும் தன் சோம்பலை முறித்து விழித்துக் கொள்ளத் தொடங்கியிருந்தது.
சென்னை கடற்கரையில் தற்போது மணலைவிட அதிகமாக இருக்கும் உணவுக் கடைகள் எதுவும் இந்தக் காலை வேளையில் திறந்திருக்கவில்லை. ஒன்றிரண்டு சைக்கிளில் மோர், சூப் கடைகள் நிறுத்தப்பட்டிருந்தது, வாங்க ஆள் இல்லை. காய்கறிக் கடை ஒன்றை அடுக்கிக் கொண்டிருந்தார் ஒரு பெண்மணி. அவருக்கு அருகில் இருந்த குடைகள் நிழலில் இருந்த சூப் கடையில் மட்டும் கூட்டம்.
நானும் அதுவரை சில ஆயிரம் அடிகள் நடந்திருந்தேன், ஒரு மாறுதலுக்காகச் சில படங்கள் எடுத்தேன். கடல் அலைகளைப் பார்க்க வேண்டும் என்று தோன்றியதால், தண்ணீர் வரை சென்றேன். எனக்கு முன்னர் அங்கே ஓரிருவர் குறும்படங்கள் (ரீல்ஸ்) எடுத்துக் கொண்டிருந்தனர். பிறகு நீச்சல்குளம் வரை நடந்துவிட்டு, கார் நிறுத்தியிருந்த இடத்திற்குத் திரும்பினேன்.
புதிதாக அமைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நீலக் கொடி கடற்கரைக்கான வசதிகள் சில நீச்சல்குளம் பின்புறம் கண்ணில் பட்டது, அவ்வளவே. வேறு இடங்களில் அதிகமாக இருக்கலாம், என் கண்ணில்படவில்லை.
கடல், காற்று, காலை… இதற்கு மேல் என்ன தேவை?








Discover more from Mangoidiots
Subscribe to get the latest posts sent to your email.

