இன்று (24 பிப்ரவரி 2024) மாலை மைலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ்ஸில் அரங்கு நிறைந்த காட்சி. பிரபல கர்நாடகச் சங்கீதப் பாடகர் யாராவது பாடுகிறார்களா என்றால் இல்லை. நடப்பதோ ஒரு நாடகம். ஆச்சரியமாக இருக்கிறதா? அது தான் இருபத்தைந்து ஆண்டுகளாகத் தொடர்ந்து நடக்கும் டம்மீஸ் டிராமா குழுவின் சிறப்பு. நல்ல கதைகளைக் கொடுத்தால் ரசிகர்கள் நிச்சயம் வருவார்கள் என்பதற்குச் சான்று இவர்கள்.
தமிழ் மேடை நாடகங்களில் காதலை நகைச்சுவையோடு சொல்லும் கதைகள் மிகக் குறைவு. அதைப் போக்கும் வகையில் டம்மீஸ் டிராமா குழு மூன்று நாடகங்களை எழுதியுள்ளார்கள். அதில் முதலாவது இன்றைக்கு நடந்த “வீணையடி நீ எனக்கு”. இது இளைஞர்களுக்கான காதல் கதை. அடுத்த இரண்டு நாடகங்கள் நடுவயதினருக்கு, முதியவர்களுக்கான காதல் கதைகள்.
வீணையடி நீ எனக்கு, கதையின் முதல் காட்சியில் காதலி, காதலனிடம் நாம் பிரிந்துவிடலாம், காரணம் என் அக்கா நேற்று வேறு மத காதலனுடன் வீட்டைவிட்டு ஓடிப் போய்விட்டாள், என் அப்பா உடைந்து போய்விட்டார். அவருக்கு இன்னுமொரு அதிர்ச்சிக் கொடுக்க முடியாது என்று சொல்லிச் சென்றுவிடுகிறாள். இதைத் தொடர்ந்து காதலன் என்னவெல்லாம் செய்து அவளுடன் இணைகிறான் என்பது தான் கதை. ஆசிரியர் ஸ்ரீவத்ஸன் கதையை ரசித்து எழுதியிருக்கிறார், மிகவே யதார்த்தமாக இருந்தது.
உதாரணமாகச் சில வசனங்கள்:
- நாயகனின் தந்தை அவனுக்குத் திருமண வரன் பார்க்கப் பெண் விட்டாரோடு பேசுகிறார் – அவர்கள் போடும் நிபந்தனைகளைக் கேட்டு அதிர்ந்து சொல்கிறார் – முதலில் பையனுக்குச் சமைக்கத் தெரியுமா என்று கேட்டார்கள், இப்போது பையனின் அம்மாவின் சமையலை டன்ஸோ செய்யுங்கள், என் பெண்ணுக்குச் சுவைப் பிடித்திருந்தால் ஜாதகத்தை அனுப்புகிறோம் என்கிறார்கள்!
- திருமணத்தன்று திடீரென்று ஆறு ஏழு பேர்கள் கருப்புச் சட்டையில் வருகிறார்கள், யாரென்று கேட்டால், போட்டோகிரபர்கள் என்கிறார்கள், எதற்கு இவ்வளவு பேர்கள் என்றால் – ஒருவர் பையனின் கென்டிட் (வெளிப்படையான) படமெடுக்க, ஒருவர் பெண்ணின் கென்டிட் எடுக்க, இருவர் ஹிடன் (மறைந்திருந்து) எடுக்க, இருவர் சடென் போட்டோகிரபர்கள் பார்வையாளர்கள் வரிசையில் அமர்ந்திருந்து திடீரென்று எழுந்து எடுப்பார்கள். இப்படி எளிதாகப் புரிந்து கொண்டு, சிரிக்கும்படியான வசனங்கள் நாடகத்தின் பலம். வாய்ப்பிருந்தால் அவர்களின் அடுத்த மேடையில் பார்த்து ரசிக்கவும்.
நாடகத்தில் நடித்த அனைவருமே அந்தந்த பாத்திரத்திற்கு நல்ல தேர்வு. முக்கியமாக நாயகனும், அவனின் தாயாக வருபவர்கள். சித்தப்பாவாக வந்தவரும் நன்றாகவே செய்திருந்தார். நாடகம் இரண்டு மணி நேரம் நடக்கிறது.



Discover more from Mangoidiots
Subscribe to get the latest posts sent to your email.

