
46th Chennai Book Fair 2023
எனது நினைவில் இந்த ஆண்டு சென்னை புத்தகக் காட்சியில் தான் நான் இந்த அளவு குறைவாகப் புத்தகங்கள் வாங்கியிருக்கிறேன். ஜனவரி 7ஆம் தேதி மதியம் ஒரு மணியிலிருந்து 5 மணி வரை அங்கேயிருந்த சுமார் ஆயிரம் அரங்குகளை ஒரு மாதிரி பார்த்துவிட்டு, நான் வாங்கியது: மூன்று புத்தகங்களும், ஒன்பது முத்து காமிக்ஸும் தான். மொத்தச் செலவு ₹2000க்கு குறைவு.
சென்ற ஆண்டு வாங்கிய புத்தகங்களை இன்னும் படிக்காததால், இந்த ஆண்டு இந்த சிக்கனம். மேலும் எனது பார்வையில் இந்த ஆண்டு புதிதாக, எண்ணத்தைக் கவரும் வகையில் எந்த புத்தகங்களும் கண்ணில் படவில்லை. சாதாரணமாகப் புத்தகக் காட்சி திறந்து ஒரு வாரம் கழித்துத் தான் பல புதுப் புத்தகங்களும் வரும். எனக்கு நேரம் இருப்பின், அடுத்த வாரம், ஒருமுறை மீண்டும் செல்லலாம், தெரியவில்லை.
- தென்னிந்தியாவின் விஷ்ணு ஆலயங்கள் (தமிழ்நாடு), திருமதி சித்ரா மாதவன்
- Aldous Huxley Brave New World – A graphic novel by Fred Fordham
- இயந்திரம், மலயாற்றூர் ராமகிருஷ்ணன், தமிழாக்கம் பா ஆனந்தகுமார்
- முத்து காமிக்ஸ்


இந்த முறை சென்னை புத்தகக் காட்சியில் நான் கவனித்த ஒரு சிறப்பு அரங்கு. தமிழ்நாடு அரசின் சிறைத்துறையுடையது. அருகில் போய் விசாரித்ததில், அங்கே இருந்த இரண்டு காவல் அதிகாரிகள் அவர்களின் “புத்தக தானம்” (Donate a Book to Prisoners) திட்டத்தைப் பற்றிப் பொறுமையாகச் சொன்னார்கள். நம்மிடம் இருக்கும் (படித்து முடித்த) புத்தகங்கள், எதுவாக இருந்தாலும், எந்த மொழியாக இருந்தாலும், குறிப்பாகத் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இருந்தால், அவற்றை இந்த அரங்கில் வரும் 22 ஆம் தேதி வரை கொடுக்கலாம். அதற்கு அடுத்து, மார்ச் வரை தீவுத்திடலில் நடக்கும் சென்னை சுற்றுலா பொருட்காட்சியிலும் கொடுக்கலாம்.
நல்ல முயற்சி, நாம் எல்லோரும் உதவலாமே! திட்டத்தை யோசித்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் பாராட்டுக்கள்.



சில நாட்கள் கழித்து, வியாழக்கிழமை (12 ஜனவரி 2023) மீண்டும் சென்னை புத்தகக் காட்சிக்கு சென்றிருந்த போது, இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்வந்த மென்பொருட்களைப் பற்றிய இந்த புத்தகங்களைப் புதிதாக, அட்டைகூட பழுப்பாகாமல் இருப்பதைப் பார்த்தவுடன், பதிப்பகத்தாரை நினைத்து பாவமாக இருந்தது, எவ்வளவு பணம் இழப்பு.
இதைப் பார்த்தவுடன் மறைந்த என் தந்தை பன்னூல் பதிப்பாளர் லிப்கோ திரு வரதன் சொன்னது தான் நினைவில் வந்து சென்றது: புத்தகம் போடுகிறேன் என்று வெள்ளைக் காகிதத்தைக் கறுப்பாக்கும் முன் பலமுறை யோசிக்க வேண்டும், அவசரப்பட்டுச் செய்தால், வங்கி கூட அச்சடித்த தாளுக்குக் கடன் கொடுக்கமாட்டார்கள்!
இன்று இருக்கும் நிலையில் பதிப்பாளராக இருப்பது ரொம்ப கடினம், பெயர் தான் பெரியது, ஆனால் மிகக் குறைவான இலாபம் கொடுக்கும் தொழில், கொஞ்சம் சறுக்கினாலும் அதுவரை இருந்த சொத்து எல்லாம் போய்விடும். சினிமாவிலாவது ஓர் ஆயிரம் படத்தில் ஒன்று மிகப் பெரிய ஹிட்டாகி தயாரிப்பாளரை கோடீஸ்வரனாக ஆக்கிவிடும், இதில் அதற்கு வாய்ப்பு ரொம்ப ரொம்ப குறைவு. ஓர் இலட்சம் புத்தகத்தில் ஒன்று வேண்டுமானாலும் அப்படி ஆகலாம்.

#chennaibookfair2023 #ChennaiBookFair

