
Drivers of my city Chennai have lost traffic sense!
சென்னை பெருநகரில் எங்கேயும் போவதற்கே கடுப்பாக, பயமாக இருக்கிறது! மெட்ரோ (மின்சார இரயில் கூட) இருப்பது மட்டுமே ஆறுதலான விசயம். எந்த காலத்திலும் எங்கள் நகரத்து ஓட்டுநர்கள், அது கார், இரண்டு சக்கரம், ஆட்டோ, பஸ் என எந்த வகையான வாகன ஓட்டுநர்களும் நல்லவர்கள் என்று சொல்ல முடியாது. இருந்தாலும் கடந்த ஒரு வருடத்தில் குறிப்பாக பெருந்தொற்றுக்குப் பிறகு, அதுவும் ஊரெல்லாம் குழித்தோண்டி வைத்திருக்கும் நிலையில் யாருக்குமே பொறுமை என்பது சுத்தமாக இல்லை. இடித்துவிட்டுச் செல்வது என்பது சர்வ சகஜமாகி விட்டது.
ஸ்கூட்டர், மோட்டார் சைக்கிள் என்றால் கட்டாயம் இடது தோளில் செல்பேசியை இடுக்கிக் கொண்டு, அதுவும் சாலையில் எதிர்புறம் தான் வேகமாக செல்ல வேண்டும் – எல்லோருமே அமெரிக்காவில் வாழ்ந்து திரும்பியவர்கள் போல் – சாலையில் வலதுபுறம் மட்டுமே ஓட்டுவது என் கங்கணம் கட்டிக் கொண்டு இருக்கிறார்கள். சிக்னல் எங்கேயுமே கிடையாது, வேலை செய்தாலும் யாருமே அதை பொருட்டாக மதிப்பதில்லை.
இரண்டு காரில் ஒன்றை விற்றுவிட்டேன், இருக்கும் ஒன்றை எடுக்கவே பிடிக்கவில்லை. எங்கே போவதென்றாலும் ஆட்டோ மற்றும் மெட்ரோ தான். இதுவும் நல்லது தான் போல. ஆட்டோ தவிர்த்து சைக்கிள் அல்லது மின்சார ஸ்கூட்டர் வாங்கி போக ஆசை, ஆனால் குண்டு-குழிகளைப் பார்த்தால் உயிருக்குப் பயமாக இருக்கிறது – காயமே இது பொய்யடா என்கிற பக்குவம் வரப் பிரார்த்திக்கிறேன்.
இந்தளவு சென்னையில் என் முப்பதாண்டு வாகனங்கள் ஓட்டிய அனுபவத்தில் பார்த்ததில்லை – நான் பேசிய சில ஆட்டோ ஓட்டுநர்களும் இந்த கணிப்பை ஒப்புக் கொள்கிறார்கள். இது சரியா, உங்கள் பார்வை என்ன?


One Comment
Seshadri Iyengar
உங்கள் பார்வை முற்றிலும் சரியே.
சென்னை…. மக்கள் வாழ தகுதியற்ற நகர் ஆகி பத்து பதினைந்து ஆண்டுகள் ஆகிவிட்டது (எனது பார்வையில்).
ஹரப்பா மொகஞ்சதாரோ ரேஞ்சுக்கு அகழ்வாராய்ச்சி நடந்து கொண்டிருக்கிறதோ என்று எண்ண தோன்றுகிறது.
சென்னை…. ஆளும் கட்சியின் கோட்டை.
அதனால் தான் சுற்றிலும் நிறைய அகழிகள் தொண்ட பட்டுள்ளது என்று தோன் (டு)றுகிறது.
நமக்கு (சென்னை வாசிகள்) சகிப்புத்தன்மை மிகமிக அதிகம்.
வரும் மழை காலத்தில் நாம் விழிப்புடன் பயணிக்க வேண்டும்.
மணப்பாக்கம் ஈவுண்ணி சேஷாத்ரி
சென்னை