போன வாரம் மதுரையில் கீழடி அருங்காட்சியகம் சென்றுவிட்டு மதியச் சாப்பாட்டுக்கு எங்கே போவது என்று பேசியதில் நான்கில் மூன்று பேர் அசைவம் என்பதால் அம்மா மெஸ் என்று முடிவு செய்யப்பட்டது. நான் எவ்வளவு போராடியும் ஒன்றும் செய்ய முடியவில்லை. வா, அங்கே உனக்குச் சாதம், ரசம், மோர் கிடைக்கும் அது போதும் வா எனக் கல்லூரி நண்பர்கள் என்பதால் கண்டிப்பாகச் சொல்லி, ஓர் அடியும் கிடைத்ததால் போனேன். எனக்கு அசைவ உணவகங்களில் சாப்பிடுவது ஒன்றும் பிரச்சனை இல்லை, அங்கே ரசம் கார சாரமாகப் பூண்டு தூக்கலாக இருக்கும், எனக்குப் பிடிக்கும். பக்கத்து இலையில் சிலந்திமீன் (ஆக்டோபஸ்) சாப்பிடும் நண்பர்களோடு தென் கொரியா எல்லாம் போன ஆள் நான்.
பிரச்சனை என்னவென்றால் வெறும் சாதம், ரசம், மோர் அன்றைய என் பசிக்கு போறாது. இருந்தும் வேறு வழியில்லாமல் போனேன். பக்கத்து, எதிர் இலைகளில் கோழி பிரியாணி, காடை, கௌதாரி, நெத்திலி எனப் பல வகைகளை அடுக்கிக் கொண்டே போனார்கள். எனக்கு வெறும் சோறு, நல்ல வேளை அதோடு சாம்பார் மற்றும் கேரட் பொரியல் என்ற பெயரில் ஒன்று கொடுத்தார்கள், படு சுமாரான ரசம், மோர் கிடைத்தது. பசி ருசி அறியாது, சோற்றை நிறையச் சாப்பிட்டேன், ஓர் எலுமிச்சை சோடா குடித்தேன். காடை, கௌதாரி என்று கட்டுக்கட்டிய நண்பனைப் பணம் கொடுக்கச் சொல்லி வெளிவந்தேன்.


#maduraifoodie #AMMAMess #madurai
Discover more from Mangoidiots
Subscribe to get the latest posts sent to your email.

