
A letter from my grandfather that I cherish
நான் பொக்கிஷமாக கருதும் கடிதம். என் தாத்தா, லிப்கோ புத்தக நிறுவனத்தின் நிறுவனர், ஸ்ரீ சடாரி சேவகர் திரு கிருஷ்ணசாமி சர்மா அவர்கள் என்னையும் என் அக்காக்களையும் வாழ்த்தி அனுப்பிய கடிதம். உடன் ரூபாய் ஆறையும் (ஒவ்வொருவருக்கும் இரண்டு ரூபாய்) அனுப்பிருந்தார். அனுப்பியது 1978ஆம் ஆண்டில். சென்னையில் வசித்திருந்த நாங்கள், அம்மாவின் சொந்த ஊரான ஸ்ரீரங்கத்திற்கு விடுமுறைக்குப் போன போது, எங்கள் தாத்தா அனுப்பிய வாழ்த்துச் செய்தி இது. கடிதத்தில் குறிப்பிட வேண்டியது அதிலிருக்கும் இரண்டு முத்திரைகள்.
எதற்கு எடுத்தாலும் திரு சர்மா அவர்கள் முத்திரை ஒன்றை வைத்திருப்பார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன், மீண்டும் மீண்டும் ஒரே வாக்கியத்தை/வார்த்தைகளை எழுதும் நேரத்தை மிச்சம் செய்யும் உத்தி இது. கடிதத்தின் நடுவில் இருக்கும் “I Bless you with every bit of my heart” என்பதைக் கவனிக்கவும், அதன் மேலே இருக்கும் ‘3’ என்ற குறிப்பு – அதாவது எங்கள் மூவருக்கும் தனித் தனியாக முத்திரையிட்டு மூன்று முறை மையைச் செலவு செய்யாமல் இருக்க இந்த ஏற்பாடு. இன்றைக்கு செல்பேசிகளின் முகப்பு திரையில் இருக்கும் செயலிகளின் இலச்சினைகளுக்கு மேல் சிகப்பு வட்டத்தினுள் இருக்கும் அறிவிப்பு எண்ணிக்கை போன்றதொரு குறிப்பு! #letters #grandfatherlove


