
தமிழில் இப்படி ஒரு அருமையானப் படமா!. அப்படியானதொரு படம் மொழி (2007).
சபாஷ் சொல்ல வைத்திருக்கிறார் இயக்குனர் ராதாமோகன்(Radha Mohan) . கதையென்றுப் பார்த்தால் சாதாரண காதல் கதை தான். பிரித்விராஜ் (Prithviraj Sukumaran), ஜோதிகா (Jyothika) இருவருக்கு வரும் காதல், பின் ஊடல், மீண்டும் சேருதல் அது தான் கதை. பின் ஏன் இவ்வளவு பாராட்டுகள் இந்த படத்திற்கு?. அதற்கு காரணம் இயக்குனரின் திறமையான பாத்திரப்படைப்பும், நேர்த்தியான கதை ஓட்டமும் தான் . இந்த மாதிரி ஒரு வித்தியாசமான படத்தை கமர்ஷியல் வெற்றியைப் பற்றிய பயம் இல்லாமல், திரைக்கு கொண்டு வந்த தயாரிப்பாளர் பிரகாஷ்ராஜ் அவர்களின் தைரியத்திற்கு சத்தமான கைத்தட்டலை நாம் கொடுக்க வேண்டும்.
படத்தில் வரும் ஜோதிகாவின் பாத்திரத்தால் பேச முடியாது, கேட்க முடியாது. அதனால் அவரோடு பேசுவது (முரண் தான்) சிரமம், பொறுமை தேவை, பக்குவம் வேண்டும். அனாதையான ஜோதிகா வாழ்க்கையில் கஷ்டப்பட்டு முன்னிற்கு வந்த ஒரு பெண், தைரியசாலி, அதனால் யாரும் தன் மேல் அனுதாபப்படுவது அவருக்கு பிடிக்காது. இந்த சவாலான பாத்திரத்தை அழகாக நம் கண்முன் கொண்டு வருகிறார் ஜோதிகா (Jyothika), நடிப்பில் அவருக்கு இந்தப் படம் ஒர் மைல்கல். இதில் நாயகிக்கு தான் ரோல் அதிகம் என்றாலும், அப்படிப்பட்ட படத்திலும் தனக்கு கொடுத்த வேலையை திறம்பட செய்துள்ளார் பிரித்விராஜ். அவரின் பாங்கான நடிப்பு நம்மை கவர்கிறது. பாராட்டுக்கள். நண்பர்களாக வரும் உதவி பாத்திரங்களை அடக்கமாக செய்துள்ளார்கள், பிரகாஷ்ராஜ் (Prakash Raj) மற்றும் சொர்ணமால்யா அவர்கள் இருவரும்.
படத்திற்கு இன்னொரு ஒரு பலம், வித்யாசாகரின் பின்னணி இசை. பாடல்களில் என்னை கவர்ந்தது, “காற்றின் மொழி” என்ற ரம்மியமான பாடலும், “கண்ணால் பேசும் பெண்ணே” என்ற காதல் பாட்டும்.

Discover more from Mangoidiots
Subscribe to get the latest posts sent to your email.
