கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக ஆகஸ்ட் மாதம் வந்தாலே மெட்ராஸ் (நவீனமயமாக்கலுக்குப் பிறகு தான் அது சென்னை) நகரம் விழாக் கோலம் பூண்டுவிடும். பல இடங்களில் நகரின் ஆங்கிலக்கால வரலாறுகள் அலசப்படும், அவர்களால் கட்டப்பட்டவை விளக்கப்படும். இது எதுவும் நம்மை அடிமைப்படுத்தியவர்களைக் கொண்டாடப்படுவதற்காக இல்லை. அவர்களின் ஆபீசர்கள் நவீன இந்தியாவின் பல அமைப்புகளை உருவாக்கியவர்கள், அந்த வகையில் நினைவுகூர வேண்டியவர்கள். வரலாற்றைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்றால் அதே பிழைகளை மீண்டும் செய்வோம் என்பதற்காகவே மெட்ராஸ் வீக். அதோடு நம் நகரின் வரலாறு நம் முன்னோர்களின் வரலாறு, அவர்களை நினைவுகூர வேண்டியது நம் கடமை.
சுமார் பதிமூன்று ஆண்டுகளுக்கு முன்னர் நான் முதல் முறையாக சென்னையின் பிரபல வரலாற்று ஆர்வலர் திரு வே ஶ்ரீராம் அவர்களின் மெட்ராஸ் வீக் நடைப் பயணத்திற்குச் சென்றேன். இதே நாளில் (18 ஆக்ஸ்ட்) 2012ஆம் ஆண்டு நடந்த நடை மெட்ராஸ் நகரின் கோட்டைச் சுவரைப் பற்றியது. Fort Wall என அழைக்கப்பட்ட இந்தச் சுவர் 1772–1773இல் கட்டப்பட்டது. ஹைதர் அலி இரண்டு முறை (1767, 1769) ஜார்ஜ் கோட்டையைத் தாக்கிய பிறகு, பாதுகாப்புக்காக இந்தச் சுவர் எழுப்பப்பட்டது. பிரிட்டிஷ் பொறியாளர் பால் பென்ஃபீல்ட் என்பவர் சுவரைக் கட்டினார். கெட்ட பெயரெடுத்த பால் பென்ஃபீல்ட் என்றே வரலாற்று நூல்களில் அவர் அழைக்கப்பட்டார் என்றார் ஶ்ரீராம். காரணம், நிதி மோசடிகள்.
அதேசமயம், சேப்பாக்கம் அரண்மனையை வடிவமைப்பு செய்தது இவர் தான். இந்தியாவில் முதலாவதாக முகலாய, இந்து, ஐரோப்பியப் பாணிகளை ஒருங்கிணைத்த கட்டிடம் இது எனவும் சொன்னார் ஶ்ரீராம். இந்தக் கட்டிடம் கட்ட அதன் உரிமையாளரான ஆற்காடு நவாபுக்கே பால் பென்ஃபீல்ட் 36% வட்டிக்குக் கடன் கொடுத்தாராம்.
மெட்ராஸ் நகரின் கோட்டைச் சுவர் 3.5 மைல் நீளம், 17 கொத்தளங்களைக் கொண்டது. அகலம் 30 அடி இருந்ததால், சுவரின் மேலே சுலபமாகப் பாதுகாப்புப் படையினர் குதிரையில் சவாரி செய்தப்படிக் செல்ல முடியும்.
சுவரைக் கட்ட மக்களிடம் வரி வசூலிக்கத் திட்டமிடப்பட்டது. ஆனால் மக்களின் எதிர்ப்பால் எந்த வரியும் வசூலிக்கப்படவேயில்லை. ஆனாலும் அது இருந்த சாலைக்கு இன்றும் “Wall Tax Road” என்ற பெயர் நிலைத்துவிட்டது. பின்னர் 19ஆம் நூற்றாண்டில், ஆங்கிலேயர்கள் இந்தியா முழுவதும் அதிகாரம் பெற்ற பிறகு சுவரின் அவசியம் குறைந்தது. சுவர் மெதுவாக அழிந்தது. இன்று பெரும்பாலான சுவரின் பகுதிகள் இல்லை, ஆனாலும் அதன் ஒரு பகுதி மட்டும் “மாடிப் பூங்கா”வில் (Terrace Garden) காணலாம்.







![Maadi Poonga [மாடி பூங்கா]](https://venkatarangan.com/wp-content/uploads/2012/08/Fort-Wall-Tour-Chennai-August2012-1008.jpg)



இந்த நடையில் சில சுவாரஸ்யமான அந்தக்கால வம்புகளையும் ஶ்ரீராம் சொன்னார்.
“ஏழு கிணறுகள்” பகுதி 1772இல் சென்னைக்கு முதலாவது திட்டமிட்ட குடிநீர் வழங்கப்பட்ட இடம். ஒருமுறை ஹைதர் அலியின் படைகள் இங்கே தண்ணீரில் விஷத்தைக் கலக்க முயன்றார்களாம்.
இந்தப் பகுதியில் 1934இல் “கருங்குழி பார்சல் வழக்கு” என அழைக்கப்பட்ட புகழ்பெற்ற கொலை வழக்கின் நிகழ்வுகளும் இங்கு நடந்ததாகச் சொன்னார். 1934 ஜனவரி 12ம் தேதி கருங்குழி ரயில் நிலையத்தில் ஆறு பார்சல்கள் வந்தன. பல நாட்கள் யாரும் வாங்க வராததால் திறந்து பார்த்தபோது, அதில் 22 வயது இளம்பெண்ணின் உடல் இருந்தது. அவர் ஏழை அய்யங்கார் குடும்பத்தைச் சேர்ந்த சீதம்மாள் என்று பின்னர் தெரிந்தது. இவர் கோவிலில் வேலை செய்த பார்த்தசாரதியின் மனைவி. பின்னர் சீதம்மாள் ராமானுஜம் என்ற ஒருவருடன் ஓடிப்போய், இப்பகுதியிலேயே குடியிருந்தார். முக்கிய குற்றவாளியாக ராமானுஜம் சந்தேகிக்கப்பட்டர். மதராஸ் உயர் நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில் புகழ்பெற்ற வழக்கறிஞர் அல்லடி கிருஷ்ணசாமைய்யர் வாதாடினார். ராமானுஜத்துக்கு முதலில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டாலும், பின்னர் அவருக்கு இருந்த அரசியல் செல்வாக்கின் காரணமாக விடுதலையானார். இந்த வழக்கைப் பிரபல எழுத்தாளர் ராண்டோர் காய் உள்ளிட்ட பலரும் தங்கள் நூல்களில் எழுதியுள்ளனர் என்று கதையை முடித்தார் ஶ்ரீராம்.
மொத்தத்தில் 2012இல் நடந்த நடையில் திரு ஶ்ரீராம் மெட்ராஸ் நகர் வரலாற்றின் ஒரு சிறு பகுதியைச் சுவையாக வழங்கினார். அவர் அடுத்த முறை நடத்தும் போது வாய்ப்பு கிடைத்தால் சென்று பார்க்கவும்.
Discover more from Mangoidiots
Subscribe to get the latest posts sent to your email.

Thanks for sharing, good to know heritage information.