பொதுவாக எல்லா ஆண்டும் சென்னை தீவுத் திடலில் நடக்கும் இந்திய சுற்றுலா மற்றும் தொழிற்பொருட்காட்சிக்கு சென்றுவிடுவேன். பெரியதாகப் பார்க்க அங்கே எதுவும் இருக்காது, அதே கடைகளும், தரம் குறைந்த சிற்றுண்டிகளும், சுவாரஸ்யமில்லாத அரசாங்கத்துறை அரங்குகளும் தான் இருக்கும். நான் போவது, என் அப்பா என்னைச் சிறிய வயதில் இங்கே அழைத்து வந்த நாட்களின் நினைவுகளுக்காக.

இன்று 47 வது பொருட்காட்சி 2022-2023க்கு சென்றிருந்தேன். என் கண்ணில் முதலில்பட்டது உணவுக் கடைகள் தான் – பாப்கார்னில் ஆரம்பித்து, பஞ்சுமிட்டாய், ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா, பானிபூரி, ஜிகர்தண்டா, உருளை சுருட்டி, காலன் சூப், கார்லி பிலவர் பக்கோடா, டெல்லி அப்பளம் எனப் பல பல சிற்றுண்டிகள். ஆனால் எல்லாவற்றையும் பார்த்துப் படம் எடுத்ததோடு சரி, எதையும் வாங்கி சாப்பிடவில்லை. அங்கே விற்கப்படும் உணவின் தரம், உபயோகப்படுத்தும் நீரின் சுத்தம் எப்படியிருக்கும் என்று பயமாகவிருந்தது. அதனால் ஆரோக்கியம் கருதி எடுத்துச் சென்ற தண்ணீரைப் பருகி, ஓர் ஆவின் பனிக்கூழ் வாங்கி ரசித்துச் சாப்பிட்டுவிட்டு கடைகளை, அரசாங்கத்துறை அரங்குகளைப் பார்த்து (அதைப் பற்றிய படங்கள் அடுத்த பதிவு) வீடு திரும்பினேன்.

எப்போதும் போல சென்னை கூவம் நதியின் உலகப் புகழ் பெற்ற கொசுக்களுக்குப் பஞ்சமேயில்லை. கடந்த சில ஆண்டுகளாக (பெருந்தொற்றுக்கு முன்னர்) முன் யோசனையாக முழு கை சட்டை, முழு டிரவுசர், சாக்ஸ், ஷூ என்று என்னை முழுவதும் முடிக் கொண்டு செல்வதால் தப்பித்தேன். நீங்கள் சென்னைக்குப் புதிது என்றால் இந்தப் பாதுகாப்புகள் மிக அவசியம். இந்தப் பொருட்காட்சி சென்னையின் ஒரு முக்கிய அடையாளம்.
எந்த ஆண்டும் இல்லாதவகையில் கார் நிறுத்த கட்டணம் இந்த ஆண்டு ரூபாய் 120, பெரியவர்கள் அனுமதி கட்டணம் ரூபாய் 40. எல்லாம் கரோனா கால விலையேற்றம் போல!











Discover more from Mangoidiots
Subscribe to get the latest posts sent to your email.

