ரொம்ப வருடங்களுக்குப் பிறகு இரவுக் காட்சிக்கு இந்தப்படத்திற்கு “தங்க மீன்கள்” இன்று போனேன். மிகுந்த எதிர்பார்ப்பு இருந்த படம் சுமாராகத் தான் வந்திருக்கிறது. படத்தில் பல நல்ல காட்சிகளைக் கொடுத்த இயக்குநர் ராம், ஓர் அபாரமான படத்தைக் கொடுக்கும் வாய்ப்பைத் தவறவிட்டுவிட்டார் என்றே சொல்ல வேண்டும்.
”ஆனந்த யாழை மீட்டுகிறாய்” பாடல் மிக அருமை. அந்தப் பாடலில் மலை உச்சியில் ஓடிவரும் காட்சிகளில் ஒளிப்பதிவு அபாரம், நாமே அந்த இடத்தில் இருப்பது போல ஓர் உணர்வு அதற்கு யுவன் சங்கர் ராஜா இசையும் அந்தளவு துணைக் கொடுக்கிறது. அப்பாவிடம் கோபித்துக் கொண்டு வீட்டைவிட்டு வெளியேறும் நாயகனுடன் வராமல் மகளையும் தாழிட்டுவிடும் காட்சிகளில் நாயகி ஷெல்லி கிஷோரின் நடிப்பு யதார்த்தம். வீட்டில் பூரி உணவு என்பதற்காகத் தனது தற்கொலை முயற்சியைத் தள்ளிப்போடும் அந்தச் சிறுமி அழகு.
இவ்வளவு நன்றாக ஓடிக் கொண்டிருந்த படத்தில் கடைசியில் திக்கு தெரியாமல் என்ன சொல்கிறோம் என்று புரியாமல், படத்தை முடிக்கிறார் இயக்குநர். தான் பொறுப்பில்லாமல் சுற்றித்திரிவதற்குத் தனியார் பள்ளிக்கூடம் எந்த வகையில் பொறுப்பு, படிக்காமல் சுற்றும் மகளைக் கண்டிக்காமல் அரசுப் பள்ளியில் சேர்த்து விடுவதால் எல்லாம் சரியாகிவிடுமா என்ன?

Discover more from Mangoidiots
Subscribe to get the latest posts sent to your email.
