இன்று ஆசிரியர் திரு பா.ராகவன் அவரின் வலைப்பூவில் தனது மேக் கணினி டெஸ்க்டாப் படத்தைப் பகிர்ந்திருந்தார். அதைப் பின்பற்றி இந்தப் பதிவு.
நான் விண்டோஸ் பயன்படுத்தத் தொடங்கிய காலம் (சுமாராக 1992) தொட்டு இன்றுவரை என் மேஜைக் கணினி, மடிக்கணினி என எதுவாகயிருந்தாலும் அவற்றின் டெஸ்க்டாப் திரை காலியாக இருக்க வேண்டும். அதில் கோப்புகளையும், செயலிகளையும் வைப்பது தெய்வக் குற்றம் என்று கருதுகிறவன் நான். என்னிடம் யாராவது அவர்களின் கணினியைச் சரிபார்க்கக் கேட்டால், என் முதல் கேள்வி “உங்கள் டெஸ்க்டாப்பில் இருந்து எல்லாவற்றையும் அதற்கான இடங்களில் மாற்றிவிடுவேன், அதற்குச் சம்மதமா?” என்பதாகயிருக்கும்.
டெஸ்க்டாப்பில் மட்டுமில்லை அலுவலகத்திலும், வீட்டிலும் எனது மேஜையிலும் அனாவசியமாக எதுவும் இருப்பது எனக்குப் பிடிக்காது. இன்றைக்கு என் மேஜையைப் பார்த்தால் அதில் இருப்பது – கணினி, திரை, ஒலிபெருக்கி, ஒலிவாங்கி, சாமிப்படம், டிஷ்யூ-பாக்ஸ், பேப்பர்-வைட், ஏசி ரிமோட், செல்பேசி, மற்றும் தண்ணீருக்கான கண்ணாடிக் கோப்பை. இதைத் தவிர வெளியிலிருந்து வந்தவுடன் ரசீதுகள், பர்ஸ், அல்லது கொரியர் வந்தால் வாங்கிய புத்தகம் ஓரிரு மணி நேரங்கள் இருக்கும். நிச்சயமாக அடுத்த நாள் காலையில் அதது அதன் நிரந்தர இடங்களுக்குச் சென்றுவிடும். இல்லையென்றால் “சிந்து பைரவி” ஜனகராஜ் போல என் தலை வெடித்துவிடும், ஒரு வகை ஆரம்ப நிலை ஓ.சி.டி. என்று சொல்லலாம்.
இது போலவே ஆண்டுக்கு ஒரு முறை என்னுடைய கணினிகள், செல்பேசி, ஐ-பேட் என எல்லாம் (ஒரே நாளில் அல்ல) பேக்டரி ரீசெட் (factory reset) செய்யப்பட்டு எல்லாச் செயலிகளும் புதிதாக நிறுவப்படும். இதன் சிறப்பை/காரணத்தை இன்னொரு நாள் பார்ப்போம்.
Discover more from Mangoidiots
Subscribe to get the latest posts sent to your email.

