இந்த மாதிரியான ஒரு நூல் தமிழில் எழுதப்பட்டிருக்கிறதா? இல்லையென்றால் செயற்கை நுண்ணறிவைக் கொண்டாவது எழுதப்பட வேண்டும்.
கடந்த சில தினங்களாக எனக்குத் தொண்டை வலி, சளி, காய்ச்சல். கண் எரிச்சலால் கணினித் திரைகளைப் பார்க்க முடிவதில்லை. சரி, ஏதாவது புத்தகத்தைப் படிக்கலாம் என்று வாங்கி படிக்காமல், வீட்டில் வைத்திருக்கும் பல நூல்களிலிருந்து எடுத்துப் படிக்க தொடங்கியது இது. திருவனந்தபுரம் நாடாளுமன்ற உறுப்பினரும், அவரின் ஆங்கிலப் புலமைக்குப் பெயர் போனவருமான திரு சசி தரூர் (Shashi Tharoor) அவர்களின் “A Wonderland of words”.
தமிழில் எழுதியிருந்தாலும் உலக நாயகன் திரு கமல் அவர்களின் ட்வீட்கள் புரியாது. அதே போலவே திரு சசி தரூரின் ட்வீட்கள் இருப்பது போலத் தோன்றும். ஆனால், அகராதியில் அர்த்தம் பார்த்துப் படித்தால் இவரின் எழுத்தின் ஆழம் புரியும், அவரின் வார்த்தை தேர்வுகள் ஏன் என்றும் புரியும். இப்படியானவர் எழுதிய ஒரு முழுப் புத்தகம் நமக்குப் புரியுமா என்ற சந்தேகத்திலேயே நூலை கையில் எடுத்து முன்னுரையைப் படித்தேன். புத்தகங்களை எடுத்துப் படித்தே பல மாதங்கள் ஆனதால், முதலில் கொஞ்சம் தடுமாறினேன், பின்னர் ஒவ்வொரு வார்த்தையிலும் என் கவனம் செல்லத் தொடங்கியது.
இவரின் பேட்டிகளைப் பார்த்தால் ஒரு மேட்டுக்குடி தன்மை தெரியும், இவர் எப்படி ஒரு சாதாரண வாசகனோடு அதுவும் ஆங்கில மொழியைப் பற்றிய நூலில் எழுதியிருப்பார் என்ற ஐயம் எனக்கு முதலில் இருந்தது. ஆனால் படிக்க படிக்க நமக்கே தெரியாமல், ஆசிரியர் நம்முடன் நெருக்கமாகிவிடுகிறார். அதற்குக் காரணம், அவர் பார்த்த வார்த்தைகளின் உள்ளே பொதிந்திருக்கும் மாயாஜாலத்தை நம்முடன் பகிரும் அவரின் உண்மையான நோக்கம். ஒவ்வொரு வரியும் எளிதாக இருக்கிறது, சுருக்கமாகவும் இருக்கிறது. ஒவ்வொரு அத்தியாயமும் சில பக்கங்களே, தனித் தனியாகவும் படிக்கலாம்.
திரு சசி தரூர், தன் எழுத்தின் மீதும், மொழியின் மீதும் அபாரக் காதல் கொண்டவர் என்பதை ஒவ்வொரு வரியிலும் காட்டுகிறார். அவரின் தந்தையே அவரின் ஆங்கில மொழி ஆர்வத்தின் காரணம் என்று தொடங்குகிறார். “Scrabble” என்கிற வார்த்தையின் ஆதியைத் தேடி புனிதப் பைபிளுக்குச் செல்கிறார். அடுத்த அத்தியாயங்களில் அமெரிக்க ஆங்கிலத்திற்கும் பிரிட்டிஷ் ஆங்கிலத்திற்கும் உள்ள வித்தியாசங்களைக் காட்டுகிறார். ஜெர்மன் மொழியிலிருந்து வந்த “Schadenfreude” வார்த்தையை விடுத்து ஏன் ஆங்கில வார்த்தையான “epicaricacy”யை தான் ஒரு ட்வீட்டில் ஏன் பயன்படுத்தினேன் என்று சொல்கிறார். இங்கே “Schadenfreude” என்பது, அடுத்தவர் படும் துன்பத்தைப் பார்த்து மனதுக்குள் மகிழ்வது என்று பொருள். ஆஸ்திரேலியா ஆங்கிலத்தின் விநோதங்களையும் சொல்கிறார்.
நூலில் மொத்தம் 101 அத்தியாயங்கள், முழுவதும் படித்துவிட்டு வருகிறேன். நன்றி.
Discover more from Mangoidiots
Subscribe to get the latest posts sent to your email.

