எனது யாழ்ப்பாணப் பயணக் குறிப்புகள்: பாகம் 4, யாழ்ப்பாணக் கோயில்கள்.
விமான நிலையத்திலிருந்து யாழ் நகருக்குச் செல்லும் வழியில் நாங்கள் போனது “ஶ்ரீ நகுலேஸ்வரர் ஆலயம்”. அம்பாள் நகுலாம்பிகை சமேத ஶ்ரீ நகுலேஸ்வரர் சுவாமி இங்கே அருள் புரிகிறார். கோயில் பின்புறத்தில் அழகான கடற்கரை அமைந்துள்ளது. கடற்கரைக்குப் போகும் வழியில் ஆண்களுக்குப் பெண்களுக்கு என்று தனித் தனியாக நீச்சல் குளங்கள் இருக்கிறது. நாங்கள் போன சமயம் சிறுவர்கள் குதித்து, நீந்தி விளையாடிக் கொண்டிருந்தனர். அதை அடுத்து சிவபூமி மடம் இருக்கிறது. அதற்கு அருகில் ஈமச் சடங்குகள் செய்யக் கூடம் இருக்கிறது.
யாழ் நகரில் எல்லாக் கோயில்களிலும் ஆண்கள் மேல் சட்டையைக் கழட்டிவிட்டு வர வேண்டும். இங்கே கோயில்களில் யாரும் அவசரப்படுவதில்லை, ஓட்டம் ஓட்டமாக ஒவ்வொரு சன்னதிக்கும் தாவுவதில்லை. யாரும் சத்தம் போட்டுப் பேசுவதில்லை, குறிப்பாகச் செல்பேசிகளை நோண்டிக் கொண்டிருப்பதில்லை. மொத்தத்தில் கூட்டம் இருந்தாலும் அமைதியாகவே இருக்கிறார்கள்.







முதல் நாள் மாலையில் நாங்கள் போய் தரிசனம் செய்தது யாழ் நகரின் பெருமையாக விளங்கும் நல்லூர் கந்தசுவாமி கோவில். வெளியிலிருந்து பார்க்கக் கோயில் கோபுரங்கள் தங்கத்தில் ஆனது போல ஜொலிக்கிறது. அழகு என்றாலே முருகன் தானே, அதே போல இந்தக் கோயிலும் அழகு. தமிழ் நாட்டுக் கோயில்களை ஓப்பிடும் போது இது அவ்வளவு பெரிய வளாகம் என்று சொல்ல முடியாது. இருந்தாலும் இங்கே விசேஷம், மூலவர் முருகன் வேல் வடிவத்தில் காட்சி தருகிறார். தெற்கு வாசலுக்கு நேராக இருக்கும் சன்னதியில் வள்ளி தெய்வயானையுடன் திரு தண்டயுத்தபாணி சுவாமி காட்சி அளிக்கிறார். கோயில் வளாகத்தினுள் படங்கள் எடுக்க அனுமதியில்லை.




இரண்டாம் நாள் காலையில் யாழ் நகரிலிருந்து ஒரு மணி நேர வாகனப் பயணத்திற்குப் பிறகு, படகுத் துறைக்கு வந்து அங்கிருந்து கப்பலில் ஏறி இருபது நிமிடக் கடல் பயணத்திற்குப் பிறகு நாங்கள் போனது நயினாதீவு. இந்தத் தீவு தமிழ்ச் சங்க இலக்கியங்களான மணிமேகலையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக விக்கிச் சொல்கிறது. சிறிய பயணிகள் படகு (Commuter ferry), ஆனால் நூறுக்கும் அதிகமானோர் ஏறி கீழ்த் தளத்திற்குச் செல்ல வேண்டும். காற்று வசதி இல்லை, சில நபர்களைத் தவிர மற்றவர்கள் நிற்க வேண்டும், கூட்டமாகவே இருந்தது. ஆனால் பயணக்கட்டணம் ஒருவருக்கு இலங்கை ரூபாய் அறுபது மட்டுமே என்று நினைவு. பாதுகாப்பிற்கு லைப்-ஜாக்கெட் கொடுக்கிறார்கள்.
முதலில் நாங்கள் போய் இறங்கியது பௌத்தக் கோயிலான ‘நாகதீப புராண விகாரை’யின் படித்துறையில். பகவான் கௌதம புத்தர் ஞானம் அடைந்து ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டு நாக மன்னர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராற்றைச் சமரசம் செய்யத் திரு புத்தர் இங்கு வந்ததாக அங்கே இருக்கும் அறிவிப்பு பதாகையில் படித்தேன். கோயிலுக்குச் சென்று எங்களுக்குத் தெரிந்த வகையில் பக்தியோடு தரிசனம் செய்தோம். அங்கேயிருந்து ஓர் ஐந்து நிமிட நடையில் இருக்கிறது இந்து கோயிலான ‘நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலயம்’. இங்கே ‘நயினார்’ என்கிற சிவன் பெருமானின் துணைவியான புவனேஸ்வரி என்கிற ‘நாகபூஷணி அம்மன்’ அருள் புரிகிறார்.
















இரண்டாம் நாள் மாலையில் நாங்கள் போனது வண்ணை ஸ்ரீ வெங்கடேச வரதராஜ பெருமாள் கோயில். இது யாழ் நகரிலேயே இருக்கும் அழகான பெருமாள் கோயில்.


மூன்றாவது நாள் ஊர் திரும்ப விமான நிலையம் செல்லும் வழியில் ஓரிரு நிமிடங்கள் நாங்கள் சென்றது “மருதனார்மடம் ஆஞ்சநேயர் கோயில்”. பெரிய உருவில் ஶ்ரீ அனுமான் இங்கே காட்சி தருகிறார்.

என் யாழ்ப்பாணப் பதிவுகள்
- எனது யாழ்ப்பாணப் பயணக் குறிப்புகள்: பாகம் 1, விமான நிலையம்.
- எனது யாழ்ப்பாணப் பயணக் குறிப்புகள்: பாகம் 2, உணவகங்கள்.
- எனது யாழ்ப்பாணப் பயணக் குறிப்புகள்: பாகம் 3, யாழ்ப்பாணக் கோட்டை.
- எனது யாழ்ப்பாணப் பயணக் குறிப்புகள்: பாகம் 5, யாழ்ப்பாண சுற்றுலாத் தளங்கள்.
Discover more from Mangoidiots
Subscribe to get the latest posts sent to your email.

Nice narrative @Vengi as usual. Boat means படகு, you have stated as கப்பலில் எறி இருபது நிமிடக் கடல் பயணத்திற்குப் பிறகு நாங்கள் போனது நயினாதீவு.
நன்றி. இந்தளவு கவனமாகப் படித்துக் கருத்திட்டதற்கு நன்றி. சாட்-ஜிபிடியிடம் ஒரு முறை கேட்டுத் தெரிந்து கொண்டு “கப்பல்” என்பதை “பயணிகள் படகு” என்று திருத்திவிட்டேன்.