உள்ளுக்குள் இருந்த பயத்தை வெளிக்காட்டாமல் சிரிக்கிற மாதிரி எடுத்த படம். சரியாக ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் (22 மார்ச் 2020) அன்று மாலை மருத்துவர்களுக்கு நன்றி சொல்ல வீட்டின் வெளியில் வந்து கைதட்டிய போது எடுத்தது.

அதற்குச் சுமார் ஒரு வாரம் முன்னர் வேளச்சேரி ஃபினிக்ஸ் மாலில் நண்பர்களோடு திரைப்படங்களைப் பார்த்துவிட்டு வந்திருந்தேன். இணைப்பில் இருக்கும் இரண்டாவது படம் நாங்கள் போன போது காலியாக இருந்த திரையரங்கம் – அப்போதே அமெரிக்காவில் பரவத் தொடங்கி மக்கள் ஜாக்கிரதையாக இருக்கத் தொடங்கியிருந்தார்கள் என்று நினைக்கிறேன்.
இந்தப் படம் எடுத்த ஒரு வாரத்துக்குள், சென்னை பெருநகர மாநகராட்சியினரால் ஃபினிக்ஸ் பேரங்காடியில் உள்ள லைஃப்ஸ்டைல் கடையில் பணியாற்றிய இரண்டு ஊழியர்களுக்குக் கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. யாரெல்லாம் அதற்கு முந்தைய இரண்டு வாரங்களில் அந்தப் பேரங்காடிக்குச் சென்றார்களோ அவர்கள் எல்லோரும் கவனமாக இருக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அந்த ஒரு மாதம் காலையில் மாலையில் எனது உடம்பு சுடுகிறதா, சலிப் பிடிப்பது மாதிரி இருக்கிறதா என்று நான் எண்ணிப் பயந்து கொண்டிருந்தேன். என்னுடன் படத்திற்கு வந்த நண்பர்கள் நால்வரையும் தினம் தொலைப்பேசியில் அழைத்து அவர்களின் நலத்தை என் சுயநலத்திற்காக விசாரித்துக் கொண்டிருந்தேன்.

உலகமே என்ன செய்வதென்று தெரியாமல் இருந்த அந்த இருண்ட நாட்களை எண்ணிப் பார்த்தால் வேறு ஒரு பிறவியில் நடந்தது மாதிரி தோன்றுகிறது! அந்த முதல் சில நாட்களில்/வாரங்களில் உங்கள் அனுபவம் என்ன, என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?
Discover more from Mangoidiots
Subscribe to get the latest posts sent to your email.

