சென்னையிலேயே சுவையான மோர் இங்கே தான் கிடைக்கும் எனச் சொல்லி, நண்பர் இங்கே அழைத்துப் போனார். போன இடம், ஆயிரம் விளக்கு பகுதியில், அண்ணா சாலையிலிருந்து க்ரீம்ஸ் சாலையில் நுழைந்து இடது புறத்தில் வரும் (சுமார்) நான்காவது சந்தில் (முருகேசன் காம்ப்லக்ஸ் தெருவில்) இருக்கும் சேட்டா மோர் (Cheta Buttermilk). சாதாரண மோரின் பெயரில் ஒரு கடையா என்று வியந்து பார்க்கையில், இரண்டு வெளிநாட்டு கார்களில் வந்தவர்கள் இறங்கி, மோர் வாங்கி சென்றார்கள், சந்தேகம் தீர்ந்தது. ஞாயிறு எட்டு மணி என்பதால் கூட்டம் குறைவு, மற்ற நாட்களில் இரவு இரண்டு மணிக்கெல்லாம் இங்கே கூட்டம் அலைமோதும் என்று அழைத்துச் சென்ற நண்பர் சொன்னார். மோரைத் தவிர பன்-பட்டர்-ஜாம், பானி பூரி, பிரட் சாண்ட்விச், பனிக்கூழ் (ஐஸ்க்ரிம்) போன்ற வகையறாக்களும் இருந்தது. ஆனால் மோருக்குத் தான் இங்கே மவுசு. அப்படி இந்த மோரில் என்ன சிறப்பு என்றா கேட்கிறீர்கள்?
ஒருவர் குடிக்குமளவு மோர் (நெகிழி) கோப்பை ஒன்று ரூ 50. வீட்டுக்கு எடுத்த செல்ல, இரண்டு பேர் குடிக்கும் அளவுக்கு நெகிழி புட்டியில் கொடுப்பது ரூ 130. சாதாரண மோரில், அவ்வளவு கெட்டியெல்லாம் (அடர்த்தி) இல்லை, நீர் மோரும் இல்லை, கொஞ்சம் உப்பு, சாட் மசாலா, கொத்தமல்லி, கருவேப்பிலை, ஒன்றிரண்டு மாங்காய் துண்டு எல்லாவற்றுக்கும் மேலே காராபூந்தி தூவி கொடுக்கிறார்கள். அவ்வளவு தான். சுவையாக இருந்தது, மோராக இருந்தது.

அடுத்தமுறை இந்தப் பக்கம் போகையில், அதுவும் வெயில் காலத்தில் போய் குடிக்கவும். இதற்காக மட்டுமே இங்கே போகுமளவு சிறப்பெல்லாம் இல்லை. அழைத்துச் சென்ற நண்பருக்கு நன்றி.
Discover more from Mangoidiots
Subscribe to get the latest posts sent to your email.


அரை லிட்டர் பால் 22₹. ஒரு தம்ளர் மோர் ₹50. ம்ம்ம்.
வெளிநாட்டு கார்களில் வந்தவர்கள் வாங்கும் இடம், இங்கேல்லாம் அப்படி தான்!