இன்று காலை நடைப்பயிற்சியின் போது, சென்னையின் அசோக் நகர் 53வது தெரு (53rd Street, Ashok Nagar, Chennai)வழியாக வந்தேன். அங்கேயுள்ள ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயில் (Sri Anjaneyar Koil), இந்த வட்டாரத்தில் மிக பிரபலம். உள்ளே சென்று, ஸ்ரீ ஹனுமான் (Sri Hanuman) அவர்களுக்கு ஒரு காலை வணக்கம் சொல்லி, இரண்டு சுற்று சுற்றிவிட்டு பார்த்தால் – வழக்கமாக வடை தான் பிரசாதமாக கொடுப்பார்கள் இன்று பொங்கல் விநியோகம், அதை வாங்கி சாப்பிட்டு விட்டு வெளியே வந்தேன்.
ஆவிப்பறக்க சூடாக எதையோ காகித குவளையில் (Papercup)கொடுத்துக் கொண்டிருந்தார் ஒரு பெரியவர். நல்ல கூட்டம் – இலவசம் என்று புரிந்தது. என்ன என்று கேட்டேன் – “நிலவேம்பு கசாயம், சூடாக இருக்கிறது அதனால் முக்கால் அளவு தருகிறேன், இன்னும் வேண்டுமென்றால் கேளுங்கள்” எனக்கூறி கஷாயத்தை நீட்டினார், “மறக்காமல் நாளையும் மறுநாளும் சாப்பிடுங்கள்” என வருவோர் எல்லோரிடமும் அக்கறையாக சொல்லிக் கொண்டே கோப்பைகளை நிறப்பிக் கொண்டிருந்தார் டி-ஷர்ட்டில் இருந்த அந்த பெரியவர்.
கோயில்கள் கடவுளை கும்பிட மட்டுமான ஓரிடம் என்பதில்லை, உண்மையில் அவை சமுதாயக் கூடங்கள் தானே என்ற எண்ணம் என் மனதில் வந்து போக, கசாயத்தை குடித்துவிட்டு (குப்பைத் தொட்டியில் கோப்பையை போட்டுவிட்டு) நடையைக்கட்டினேன்.
Comments