
சென்னைப் பல்கலைக்கழகத்தின் கணினித்தமிழ் பன்னாட்டுக்கருத்தரங்கம்
நான் படித்தது ஸ்ரீபெரும்புதூர் அருகேயுள்ள ஸ்ரீ வேங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரியில், பொறியியல் (மின்னணு மற்றும் தகவல் தொடர்பு) பட்டம் பெற்றது சென்னை பல்கலைக்கழகத்திலிருந்து (அப்போது பொறியியல் கல்லூரிகள் அண்ணா பல்கலைக்கழகத்தில் இணைக்கப்படவில்லை). எதற்கு இதையெல்லாம் சொல்கிறேனா?, விஷயம் இருக்கிறது!.
நாம் படித்த கல்லூரியிலோ அல்லது நாம் பட்டம் பெற்ற பல்கலைக்கழகத்திலேயே நமக்கு ஒரு வாழ்த்துக்கிடைத்தால் அது நமக்கு பெரிய ஒரு மகிழ்ச்சி தானே!. அப்படி ஒரு நிகழ்ச்சி எனக்கு இன்று நடந்தது. சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ் மொழித்துறை தலைவர் பேராசிரியர் திரு.ந.தெய்வசுந்தரம் அவர்களின் அழைப்பில் இன்று நடைப்பெற்ற கணினித்தமிழ் பன்னாட்டுக்கருத்தரத்தின் தொடக்கவிழாவில் தான் எனக்கு அந்த வாய்ப்புக்கிடைத்தது. சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மாண்பமை கர்னல் பேராசிரியர் க.திருவாசகம் அவர்கள் தலைமையுரையாற்றினார் – அப்போது அவர் எனக்கு பொன்னாடை போர்த்தியப் போது நான் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்.
நிகழ்ச்சியின் மையவுரையினை அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் மு.ஆனந்தகிருட்டினன் அவர்கள் வழங்கினார், தமிழ்நாட்டு அரசின் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மாண்புமிகு திருமதி.பூங்கோதை ஆலடி அருணா அவர்கள் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார். மேலும் முனைவர் நீலாதிரி சேகர்தாஸ் (இந்தியப் புள்ளியியல் கழகம்,கொல்கத்தா), சிங்கப்பூர் நாண்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகப் பேராசிரியர் ஆ.இரா.சிவகுமாரன் அவர்களுடன் உத்தமம் தலைவர் என்கிற முறையில் நானும் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினேன்.
வாழ்த்துரையில் நான் பேசியதல் இருந்து சில குறிப்புக்கள் கீழே:
- இது மிக பொருத்தமான (செம்மொழி மாநாட்டோடு இணைந்து தமிழ் இணைய மாநாடு 2010 வரும் சூன் 23-27 நடப்பதற்கு முன்பாக) தருணத்தில், மிக அருமையாக (பலதரப்பட்ட அறிஞர்கள் – மொழியியல், கணினியியல், பொறியாளர்கள் எல்லோரையும் ஒன்றாக அழைத்து) ஏற்பாடு செய்யப்பட்ட கருத்தரங்கம்
- கடந்த பத்தாண்டுகளில் தமிழ் கணினி, இணையத்தின் வளர்ச்சிக்கு எப்படி தமிழ் இணைய மாநாடு 1999 ஒரு அடிதளமாக அமைந்தது
- 2000ம் ஆண்டு உத்தமத்தின் தோற்றம் முதல் சுருக்கமாக 2009ம் ஆண்டு ஜெர்மனி கோலோனில் நடந்த மாநாடு வரை
- இதுவரை தமிழ் இணையத்தில் வளர்ச்சி தமிழ்நாட்டிற்கு வெளியில் இருந்து அதிகளவு வந்துள்ளது, ஆனால் அடுத்த பத்தாண்டில் அது தமிழ்நாட்டில் இருந்து தான் அதிகமாக, வேகமாக (வளர்ச்சிகள்) வரப் போகிறது என்பது என் நம்பிக்கை. இங்கே தான் அதிகமான மக்கள் உள்ளார்கள், மேலும் இந்திய நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியின் காரணமாக இங்கே தான் அதற்கான பொருளாதார வளமும் அதிகமாக கிடைக்கும்
- என் கணிப்புப்படி உலகளவில் சுமார் 3000 பேர் தமிழ் கணினித்துறை, தமிழ் மென்பொருட்கள் தயாரிப்பில் முழுநேரமாக ஈடுப்பட்டுள்ளார்கள். இதை நாம் மேலும் பல மடங்கு அதிகரிக்க வேண்டும். அதற்கான வழிகள், திட்டங்கள் சென்னை பல்கலைக்கழகம் போன்ற கல்விச்சாலைக்களிலில் இருந்து தான் வர வேண்டும்
- நாம் கணினியில் தமிழ் வருவது, செல்பேசியில் தமிழ் வருவது என்பதை தாண்டி இன்னும் பல துறைகளில், துறைகள் சார்ந்த செயலிகளில் தமிழ், என்பதை செயல்படுத்த வேண்டும், அங்கே தான் பொருளாதார வாய்ப்புகளும் அதிகம். உதாரணமாக – Video Games, சினிமா, பொழுதுப்போக்கு, SAP போன்ற ERP Software, Tally போன்ற Accounting Software என்று சொல்லிக் கொண்டே போகலாம்
- மாண்புமிகு தமிழக முதல்வரின் அழைப்பை ஏற்று நடக்கவுள்ள உத்தமத்தின் தமிழ் இணைய மாநாடு 2010க்கு அனைவரையும் அழைத்தல்
பேராசிரியர் ஆ.இரா.சிவகுமாரன் பேசிய போது சிங்கப்பூரில் புதிய மென்பொருட்களைப் பயன்படுத்தி எப்படி சிறப்பாகவும், மாணவர்களுக்கு எளிதில் புரியும்படியும் தமிழ் கற்று கொடுக்கிறார்கள் என்பதை விளக்கினார். உதாரணமாக Soft Chalk என்கிற மின்-பாடங்கள் தயாரிக்கும் செயலி பற்றியும், Hot Potatoes என்கிற செயலில் தமிழ் வசதி முதலில் இருக்கவில்லை என்றும் சிங்கப்பூர் அரசாங்கம் கேட்டுக் கொண்டவுடன் அதன் தயாரிப்பாளர்கள் தமிழ் வரும்படி செய்தார்கள் என்றும் விளக்கமாக கூறினார்.




(கருத்தரங்கின் தொடக்க விழாவைப் பற்றி மேலும் விவரங்களை முனைவர் மு.இளங்கோவன் அவர்களின் வலைப்பதிவில் இங்கே படிக்கலாம்)

