சில நாட்களுக்கு முன் சென்னை மீனம்பாக்கம் அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி தமிழ்த்துறையிலிருந்து ஒரு அழைப்பு. அந்த கல்லூரி எங்கே இருக்கிறது என்றே எனக்கு தெரியாது. அழைத்த முனைவர், வரும் வியாழக்கிழமை கணித்தமிழும் பயன்பாடும் என்ற தலைப்பில் ஒரு கருத்தரங்கம் நடத்துகிறோம். உங்கள் நண்பரும் கணித்தமிழ்ச் சங்கத்தின் தலைவருமான திரு.மா.ஆண்டோ பீட்டர் பேசுகிறார், நீங்களும் பேச வேண்டும் என்றார்கள். நம்மையும் ஒரு கல்லூரியில் அழைக்கிறார்களே அவர்களை ஏமாற்றக்கூடாது என்பதால் சரி என்று சொன்னேன்.
அங்கே போனவுடன் தேனீர் அருந்தும் போது தான் புரிந்தது, இது பிரபலமான சென்னை எ.எம்.ஜெயின் கல்லூரி என்று, அசடுவழியாமல் முன்பே தெரிந்ததுப் போல் சமாளித்துவிட்டேன். சென்னைவாசியான நமக்கு சமாளிக்கவும் உதார்வுடவுமா சொல்லித்தர வேண்டும்!.
கருத்தரங்கிற்கு கல்லூரியின் புலத்தலைவர் (Dean) முனைவர்.ஜி.கே. பிரான்சிஸ் தலைமை வகித்தார். திரு.மா.ஆண்டோ பீட்டர் ‘கணினியும் தமிழும்’ என்ற தலைப்பிலும், நான் ‘கணித்தமிழ் வழி வேலைவாய்ப்புகள்’ என்ற தலைப்பிலும், தமிழ்த்துறை ஆலோசகர் முனைவர். இரா.இராசேந்திரன் ‘இணையத்தமிழ் வளர்ச்சி’ என்ற தலைப்பிலும் பேசினர்.
என் பேச்சு மாணவர்களுக்கு ஆர்வமாகவும் அதே சமயம் பயனாவும் இருக்க வேண்டும் (அச்சத்தில்) என்பதால் மொழியில் தேர்ச்சியடைவதால் பயன்கள், அதனால் கிடைக்கும் வேலை வாய்ப்புகளைப்பற்றி சுருக்கமாக சொன்னேன். இன்று எல்லாத்துறையிலும் கணினித்திறமை எப்படி அவசியமோ, அதுப்போலவே தான் மொழியில் தேர்ச்சியும் அவசியம், குறிப்பாக அரசுத்துறையில், ஊடகங்களிலும், தொலைத் தொடர்பு நிறுவனகளிலும், விளம்பரத்துறையிலும், நுகர்வு பொருள்கள் விற்பனைச் செய்யும் பன்னாட்டு நிறுவனங்களிலும் (FMCG) வேலைகள் கிடைக்கும். தமிழ் தெரிந்தால் இங்கேல்லாம் தமிழ் எழுத்தாளர் வேலை தான் கிடைக்கும் என்றில்லை அது உங்களை தனித்து அடையாளம்காட்ட உதவும், அது தான் நம் வளர்ச்சிக்கு முக்கியம். இன்று குறைந்தளவு ஆங்கில அறிவு கட்டாயம் தேவை, இன்னும் ஒரு பத்தாண்டுகளில் சீனா மொழியும் கூட தேவைப்படலாம், ஆனால் என்றும் ஒரு அளவிற்கு மேல் நம்மை எடுத்துச் செல்ல தாய் மொழி தான் உதவும் என் சொன்னேன்.
பொறுமையாக கேட்ட மாணவர்களுக்கும், என்னை அழைத்த கல்லூரி நிர்வாகத்திற்கும் என் நன்றிகள்.
Discover more from Mangoidiots
Subscribe to get the latest posts sent to your email.

