இந்தக் காட்சியைப் பார்த்தபோது மனம் ஏனோ கனத்துப் போனது.
வழக்கமாக மணல் பகுதியில் நடந்தால் சீக்கிரம் சோர்வாகிவிடும் என்பதால் நான் அங்குச் செல்ல மாட்டேன். ஆனால் இன்று மெரினா கடற்கரையில் ஔவையார் சிலையிலிருந்து கூவம் கடலில் கலக்கும் இடம் வரை, அந்த 2.5 கிலோமீட்டர் தூரத்தைக் கடல் நீருக்கு அருகிலேயே கடக்கலாம் என முடிவு செய்தேன். நாளை கிறிஸ்துமஸ் விடுமுறை என்பதால் கூட்டம் அலைமோதியது. ஒரு பக்கம் குடும்பங்கள் நீரில் விளையாடிக் கொண்டிருக்க, இன்னொரு பக்கம் ஜோடிகள் மணலில் தஞ்சம் புகுந்திருந்தனர்.
இந்தக் கொண்டாட்டங்களுக்கு நடுவேதான் அந்தப் பங்குனி ஆமை (Olive Ridley Sea Turtle) இறந்து கரை ஒதுங்கிக் கிடந்ததைப் பார்த்தேன். அதைப் பார்த்தபோது ஏற்பட்ட வருத்தத்தில், அந்த ஆமையைப் படம் எடுத்துச் செயற்கை நுண்ணறிவிடம் (AI) கேட்டேன்.

அந்தச் செய்யறிவு சொன்ன தகவல்கள் நெஞ்சைச் சுட்டன:
🐢இந்த ஆமைகள் பொதுவாக 60 வயது வரை வாழக்கூடியவை.
🐢நான் பார்த்த ஆமையின் வயது வெறும் 10 முதல் 15-க்குள் தான் இருக்கும்.
🥚அதாவது, இது முட்டையிடும் பருவத்தை எட்டிய இளம் வயது ஆமை.
😔இந்த 2025-ஆம் ஆண்டில் மட்டும் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆமைகள் இப்படி இறந்துள்ளதாகச் செய்திகள் சொல்கின்றன. சட்டத்திற்குப் புறம்பாகக் கரைக்கு அருகே வீசப்படும் இழுவலைகளும் (Near-shore Trawling), கடலில் நாம் கலக்கும் நெகிழி (Plastic) கழிவுகளுமே இவற்றுக்கு எமன். மூச்சு வாங்குவதற்காக அவ்வப்போது தண்ணீருக்கு மேலே வரும்போது, இந்த வலைகளிலும் நெகிழி கழிவுகளிலும் சிக்கி வெளியே வர முடியாமல் இவை மூச்சுத்திணறி இறந்துவிடுகின்றன.
நமது ஒரு மாலை நேர நடைப்பயிற்சி எவ்வளவு சாதாரணமாக இருக்கிறதோ, அவ்வளவு சாதாரணமாக இந்த உயிரினங்களின் அழிவும் நிகழ்ந்து கொண்டிருப்பதுதான் வேதனை.




#chennai #marinabeach #oliveridley #seaturtle #wildlifeconservation #conservation
Discover more from Mangoidiots
Subscribe to get the latest posts sent to your email.

