நைல் முதல் கூவம் வரை: ஒரு நெகிழிப் பொருளாதாரம்!
தி கார்டியன் (The Guardian) இதழில் இன்று ஒரு சிந்திக்கவைக்கும் செய்தியைப் படித்தேன். எகிப்தின் நைல் நதியில் மீன்கள் குறைந்துவிட்டதால், அங்கிருக்கும் மீனவர்கள் இப்போது மீன்களுக்குப் பதிலாக நெகிழிக் கழிவுகளை வலைவீசிப் பிடிக்கிறார்களாம்.
‘வெரிநைல்’ (VeryNile) என்ற அமைப்பு, மீனவர்கள் சேகரிக்கும் நெகிழிக் கழிவுகளுக்குச் சந்தை விலையைவிட அதிக பணம் வழங்குகிறது. இதன் மூலம் மீனவர்களின் வாழ்வாதாரம் காக்கப்படுவதோடு, நைல் நதியும் சுத்தமாகிறது. இது ஓர் அற்புதமான பொருளாதார முறை எனப்படுகிறது.

இதைப் படித்தபோது எனக்கு உடனே தோன்றியது நம்ம ஊர் கூவம்தான். இதே போன்ற ஒரு முன்னெடுப்பை நாம் ஏன் சென்னைக் கூவத்தில் முயற்சி செய்யக்கூடாது? கூவம் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு இது ஒரு கௌரவமான வேலைவாய்ப்பாக அமையும். மொத்தமாக நாசமாகிவிட்ட கூவத்தை இதைச் செய்தாலும் மீட்க முடியுமா என்பது சந்தேகம்தான். இயந்திரங்களைக் கொண்டு பல ஆண்டுகள் மல்லுக்கட்டினாலும் கூவத்தைக் காப்பாற்ற முடியாது என்பது நாம் அறிந்ததே.
ஆனால், உள்ளூர் மக்களின் வாழ்வாதாரமாக ஒரு செயல் – அது எவ்வளவு சிறியதாக இருந்தாலும் – எங்கோ கோட்டையில் இருக்கும் அரசு அதிகாரிகள் அல்லது அமைச்சர்கள் எடுக்கும் புரட்சிகரத் திட்டங்களைவிடச் சிறந்தது; தொடர்ந்து நடக்கக்கூடியது; அதிக பலன் தரக்கூடியது.
இத்தகைய முயற்சி ஒரு சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் எனவும் நினைக்கிறேன். மீனவர்கள் ஆற்றில் இறங்கி நெகிழிக் கழிவுகளைச் சேகரிப்பதைப் பார்க்கும்போது, ஆற்றை அசுத்தம் செய்யும் மக்களுக்கும், உள்ளூர் நகராட்சிக்கும் ஒரு குற்ற உணர்வும் பொறுப்புணர்வும் தானாக வரலாம். “நம்ம ஊர் ஆறு, நாம் ஏன் இதை அசுத்தம் செய்ய வேண்டும்?” என்ற எண்ணம் மக்களிடையே நிச்சயம் வளரும்.
நாமும் நம் ஆறுகளைக் காக்க ஏன் இதுபோன்ற எளிய, ஆனால் ஆழமான மாற்றங்களை நோக்கி நகரக் கூடாது! நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
Discover more from Mangoidiots
Subscribe to get the latest posts sent to your email.


Our coovum , is not dumped just plastic alone it contains sewage too isn’t?
Yes, you are right. But in recent years, I read in news, that corporation and pollution control have been doing a lot of work on plugging the sewage menace.