
நான் ஈ (Eega) பார்க்க வேண்டும் என்று என் பையன் பல நாட்களாகக் கேட்டுக் கொண்டிருந்தான். இன்று எஸ்கேப் திரையரங்கில் படம் பார்த்தோம். மிகப் பல நாட்களுக்கு பிறகு சிரித்து மகிழ வைத்தப் படமிது.
கதையென்று பெரிதாக ஒன்றுமில்லை. வில்லன் கதாநாயகனைக் கொன்றுவிடுகிறான், மறு ஜென்மத்தில் கதாநாயகன் நானி (Nani) ஒரு “ஈ”ஆக வந்து, நாயகியின் துணையோடு வில்லனைப் பழி வாங்குகிறான். இந்த சின்னக் கதையை வைத்துக் கொண்டு இயக்குனர் ராஜமௌலி (S S Rajamouli) ஒரு அபாரமான விருந்து வைத்திருக்கிறார்.
சமந்தா (Samantha) படம் நெடுக அழகாக வந்துப் போகிறார், காதல் காட்சிகளில் அவரும் நானியும் செய்கின்ற குறும்புகள் ராசிக்கும்படி இருக்கிறது. ஒளிப்பதிவும், கிராப்பிக்ஸ்யும் அபாரம், உலகத்தரத்திற்கு சென்றுவிட்டார்கள். “ஈ”ஆக வந்து நானி அடிக்கும் லூட்டிகள் அடேங்கப்பா ரகம். வெளிநாட்டு வியாபாரிகள் வந்துள்ள நிகழ்ச்சியில் வில்லனை சீண்டும் “ஈ”இன் காட்சிகளில் சிரித்து சிரித்து எனக்கு வயிரே வலித்துவிட்டது. அந்த காட்சிகளில் வில்லனாக வரும் சுதீப் (Sudeep) நடிப்பில் பிய்த்து உதறிவிட்டார், அதுவும் நிஜத்தில் இல்லாத ஈயை கற்பனைச் செய்து நடிப்பில் அவர் தவிக்கும் காட்சிகளில் எங்கேயோ உயரத்திற்கு போய்விட்டார்.
சந்தானம் வரும் சின்ன காமெடி ட்ராக்கை படம் முடிந்து டைட்டில் கார்டில் முடித்திருப்பது இயக்குனரின் நல்ல கை வண்ணம், கதையின் நடுவில் அதை வைத்திருந்தால் கதையின் ஓட்டம் பாதிக்கப்பட்டு இருக்கும்.
Discover more from Mangoidiots
Subscribe to get the latest posts sent to your email.


