இன்று தமிழ்ப் பாரம்பரியம் அறக்கட்டளை (Tamil Heritage Trust) தனது மாதந்திரக் கூட்டத்தில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி – கல்வெட்டுகளில் வைகறை ஆட்டம், விருந்தினர்: முனைவர் ஆ. பத்மாவதி அவர்கள். இவர் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையில் கல்வெட்டுத் தொகுதிகள் பத்துக்கும் மேல் பதிப்பித்துள்ளார், செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தில் ‘புதிய நோக்கில் களப்பிரர் வரலாறு’ என்ற ஆய்வை நிகழ்த்தி ஆய்வேடு சமர்ப்பித்துள்ளார். நிகழ்ச்சி வழக்கம் போல தக்கர் பாபா விநோபா அரங்கில் மாலையில் நடந்தது.
இன்று அவர் பேசியது, திருவிடைமருதூர் மற்றும் திருவெண்காடு கல்வெட்டுகளில் ‘வைகறை ஆட்டம்’ என்ற நாட்டியம் நிகழ்த்தப்பட்ட தகவல்கள் கிடைத்துள்ளன. அது எவ்வாறு நிகழ்த்தப்பட்டது என்ற விவரம் அக்கல்வெட்டுகளில் கூறப்படவில்லை. எனவே அது எவ்வகை ஆட்டம், அது ஆடப்பட்ட விதம், பாடப் பெற்ற இசைப் பாடல் ஆகியவை எதுவாக இருக்கும் என்பது பற்றி சிலப்பதிகாரம், தொல்காப்பியம் ஆகியவற்றின் துணையுடன் தனது ஆய்வை முன்வைத்தார்.
எனக்கு இசை, ராகங்கள், நாட்டியம், இலக்கியம் இவை எதைப்பற்றியும் ஞானம் கிடையாது, இருந்தாலும் முனைவர் பத்மாவதி அவர்களின் முயற்சி பிரம்மிக்க வைத்தது. வெறும் கல்வட்டில் இருந்து, அவர் இலக்கியங்களில் வரும் ராகங்களின் குறிப்பை வைத்து (மோகனராகம் = முல்லைத்தீம்பாணி), வழக்கத்திலிருந்து மறைந்த/இருக்கும் நாட்டிய முறைகளை தொடர்ப்படுத்தி எப்படி எப்படியோ சிரமப்பட்டு “வைகறை ஆட்டம்” பல நூறாண்டுகளுக்கு முன் எப்படி இருந்திருக்கும் என்று விளக்கினார். பாராட்ட வேண்டிய ஆய்வு.